கரன்ட் இல்லை.. கதவில்லாத வீடு.. பிளஸ் 2வில் 524 பெற்ற சகானா.. நீட்டையும் ஒரு கை பார்க்கிறார்!
Recommended Video
பேராவூரணி: மின் வசதி இல்லாத குடிசை வீட்டில் இருந்து அரசுப் பள்ளியில் படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே முதலிடம் பிடித்த மாணவி சகானா நீட் தேர்வும் எழுத ஆயத்தம் செய்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேசன்- சித்ரா தம்பதி. கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு தேவிபாலா, சகானா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.தேவி பாலா அங்குள்ள கல்லூரியில் எம்எஸ்சி கணிதம் பயின்று வருகிறார். சகானா பிளஸ் 2 முடித்துள்ளார்.
இவர்களுக்கு சொந்தமாக வீடோ, இடமோ இல்லாத நிலையில், வேறு ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ஒரு சிறிய குடிசை மட்டும் அமைத்து அதில் வசித்து வருகின்றனர். இன்று வரை மின்சாரம் வசதி இன்றி, கதவு கூட இல்லாத அந்த குடிசையில் வாழ்ந்தாலும், படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்ற சிந்தனையை கெட்டியாக பிடித்து கொண்டார் சகானா.
10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு
இரவில் சோலார் ஒளி
மின்சார வசதி இன்றி பகலில் சூரிய ஒளியிலும், இரவில் சோலார் வெளிச்சத்திலும் மட்டுமே படித்த சகானா, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக திகழ்ந்தார்.
குறை சொல்ல மாட்டேன்
அது மட்டுமில்லாமல் தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 524 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்து மீண்டும் சாதனை படைத்து உள்ளார். இது குறித்து கேட்ட போது, மின் வசதி இல்லை, நல்ல வீடு இல்லை, அதனால்தான் நான் படிக்க முடியவில்லை என மற்றவர்கள் போல் குறை சொல்ல மாட்டேன்.
தெளிவு
ஆசிரியர் பாடம் கற்றுக் கொடுக்கும் போது கவனமாக கேட்பேன், சந்தேகம் வந்தால் உடனே ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெற்றுவிடுவேன், அம்மா வாங்கித் தந்த சோலார் விளக்கை பயன்படுத்தி இரவில் படிப்பேன்.
நீட் தேர்வு
நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் நான் தற்போது நல்ல மதிப்பெண் பெற்று உள்ளேன் என தெரிவித்தார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பெண்ணின் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் நீட் தேர்வுக்கும் தயார் செய்து வருகிறார்.
இந்த மாணவியை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்: 8270223022. மாணவியின் வீட்டுக்கு தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை சோலார் விளக்குகளை அளித்துள்ளார்.