சசிகலா பிறந்த நாளை முன்னிட்டு.. தியாக தலைவி சின்னம்மா பேரவையின் உறுப்பினர் அட்டை விநியோகம்
தஞ்சாவூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் இன்று கொண்டாடினர். அத்துடன் தியாக தலைவி சின்னம்மா பேரவைக்கான உறுப்பினர் அட்டையும் அவர்கள் விநியோகித்தனர்.
அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. சில அமைச்சர்களின் பேச்சால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தற்போது இந்த பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சசிகலாவின் பிறந்த நாளை முன்னிட்டு தியாக தலைவி சின்னம்மா பேரவை என்ற அமைப்பினர் தஞ்சாவூர் விளாரில் உள்ள சசிகலா கணவர் நடராஜனின் சமாதியில் பூஜை செய்தனர். அங்கு இந்த பேரவைக்கான உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.
தியாக தலைவி சின்னம்மா பேரவையின் நிறுவன தலைவர் பொன் ஆனந்த் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன் ஆனந்த், இதுவரை 48 லட்சம் பேருக்கு உறுப்பினர் அட்டை கொடுத்துவிட்டோம். சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் வரும் போது 50 லட்சம் பேர் அவரை திரண்டு வரவேற்போம் என்றார்.