தமிழுக்கு ஆட்சியாளர்கள் யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. சீமான் ஆவேசம்
தஞ்சாவூர்: ஆட்சியாளர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் துளி திட்டம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் தமிழகத்தில் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. வருங்கால சந்ததியினருக்கும் தொல்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.
ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் என இந்த மூன்றும் அத்தியாவசியமானது. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத நாட்டை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்தாலும் கட்டுப்படுத்த முடியாது.
ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் அவர்களது மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். நேற்று தமிழ்நாடு தினவிழா தமிழகத்தில் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் பல இடங்களில் கடை பெயர், விளம்பர பலகைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டத்தில் வழிகாட்டி பலகை, விளம்பரம் போர்டு, இடத்தை குறிக்கும் போர்டு ஆகியவற்றில் தாய் மொழியான தமிழ் மொழியை முதலில் பெரிய எழுத்தாகவும், அதற்கு அடுத்தபடியாக ஒரு மடங்கு பொதுமொழி இருக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் இந்த சட்டத்தை கருணாநிதி ,ஜெயலலிதா ஆகியோர் நிறைவேற்றவில்லை என்றார்.