தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு
தஞ்சை: தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.
இன்றைய சட்டசபை அமர்வில் 110 விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதிலும் குறிப்பாக தமிழகம், தமிழ் நலன் தொடர்பாக பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் மானியம் 1000 ரூபாயிலிருந்து ரூ.2500மாக உயர்த்தப்படுகிறது. நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும், தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும். நடந்தாய் வாழி காவேரி என்ற பெயரில் காவிரி பாதுகாப்பு குறித்து ஒரு திட்டம் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல், நெல்லை மாவட்டம், இடையன்குடியில் தங்கி, தமிழ்ப் பணியாற்றியவர். 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நுால் எழுதி உள்ளார். 1856ல் அதை ஆங்கிலத்தில், வெளியிட்டார். 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', என்ற நூலை எழுதியுள்ளார்.
தென்னிந்திய மொழிக் குடும்பத்தில திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தவர் ராபர்ட் கால்டுவெல். பின்னர் அதுபற்றி கட்டுரைகளாகவும் வெளியிட்டார். 1891ல் ஆகஸ்ட் 28ம் தேதி இயற்கை எய்தியவர் கால்டுவெல்.
கால்டுவெல்லின், 200 ஆண்டு நிறைவு விழாவை, அரசு விழாவாக கொண்டாட தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலப் பேராயர் கிருஸ்துதாஸ், முதல்வருக்கு, கோரிக்கை விடுத்ததையேற்று, 2014ம் ஆண்டு அப்போதைய முதல்வரான ஜெயலலிதா அரசு விழாவாக அதை கொண்டாட உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.