பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சியை நடத்துவதில் உறுதி.. ரவி சங்கர் பிடிவாதம்!
Recommended Video
தஞ்சை: நீதிமன்ற அனுமதியுடன், தடையை நீக்கி தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சி நடத்தப்படும் என்று வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில், வாழும் கலை அமைப்பு சார்பில், தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், இந்த தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய சின்னமான பெரிய கோயிலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது அந்த பாரம்பரியத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது.
இதை எதிர்த்து வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, ரவிசங்கர் நடத்தவிருந்த தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
பந்தல்கள் நாற்காலிகள்
கோவில் வளாகத்தில் போடப்பட்டிருந்த பந்தல்கள், நாற்காலிகளை, உடனே அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தினர். எனவே தஞ்சையில் உள்ள மற்றொரு தனியார் மண்டபத்தில் வைத்து தியான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆச்சரியம்
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரவிசங்கர், இந்து மத கோவிலில் இந்துமத நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் உரிய அனுமதி பெற்று தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம் என்று தெரிவித்தார்.
மீண்டும் தியான நிகழ்ச்சி
இதனிடையே நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று மீண்டும் தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சி நடத்தப்படும் என்று வாழும் கலை அமைப்பு அறிவித்துள்ளது. இந்த பிடிவாதத்தின் காரணமாக தஞ்சையில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
சைவ சித்தாந்தம்
தஞ்சை பெரிய கோயில் மீட்பு குழு தலைவர் மணியரசன் கூறுகையில், சைவ சித்தாந்தத்திற்கு எதிராக ரவிசங்கர் குருஜி செயல்படுகிறார். துறவிகளுக்கு பிடிவாதம் அழகல்ல என்றார். வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், வழக்கு தொடர எல்லோருக்கும் உரிமையுள்ளது. சட்டப்படி நீதிபதிகள் முடிவெடுப்பார்கள். தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற கோவிலில் தனியார் நிகழ்வுகளுக்கு அனுமதியளிப்பது வழக்கம் இல்லை என்றார்.