இந்து கோவிலில் இந்து மத நிகழ்ச்சிக்கு தடையா? என்ன இது? ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கேள்வி!
இந்து மத நிகழ்ச்சி ஒன்றை இந்து கோவிலில் நடத்த ஏன் அனுமதி வழங்கவில்லை என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தஞ்சாவூர்: இந்து மத நிகழ்ச்சி ஒன்றை இந்து கோவிலில் நடத்த ஏன் அனுமதி வழங்கவில்லை என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சார்பில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக மண்டபங்கள் போடப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர், இந்த நிகழ்ச்சிக்கு எதிராக மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் என்ன?
ஆனால், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தொடர்ந்து அங்கு நிகச்சியை நடத்த போகிறார் என்று செய்தி வந்தது. அங்கு போடப்பட்டு இருக்கும் பந்தல்கள் பிரிக்கப்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அங்குதான் இருக்கிறார்கள். இதனால் கண்டிப்பாக நிகழ்ச்சி அங்கு நடக்கும் என்று தகவல்கள் வந்தது.
மறுத்தார்
இந்த நிலையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் இதுகுறித்து பேட்டியளித்துள்ளார். அதில், இனி தஞ்சை பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சி நடத்த நினைக்க மாட்டேன். அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். நாங்கள் காவிரி மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
மக்களின் நேசம்
தஞ்சை மக்கள் நாங்கள் இங்கு கூட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தார்கள். மக்களின் விருப்பம் அதுதான். கோவிலில் கூட்டம் நடத்த வேண்டும் என்று அவர்கள்தான் விரும்பினார்கள். அதனால்தான் இங்கு வந்தோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.
தவறான செய்தி
நாங்கள் இங்கு எந்த விதமான பாரம்பரிய கலை பொருட்களையும் அழிக்கவில்லை. தொல்பொருட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாங்கள் பாதுகாப்பாகத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.
கவலை அளிக்கிறது
நாங்கள் எல்லாம் அனுமதியும் பெற்றுத்தான் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டோம். ஆனால் ஏன் நிகழ்ச்சிக்கு தடை விதித்தார்கள் என்று தெரியவில்லை. இந்து கோவில் ஒன்றில் இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது ஆச்சர்யாமாக இருக்கிறது. தொல்பொருள்துறையின் அனுமதி இருந்தும் கூட தடை விதித்தது ஆச்சர்யம் அளிக்கிறது, என்றுள்ளார்.