தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு
சென்னை: அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏன் கூட்டணி அமைத்தது என்று அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம் அளித்தார். மேலும், தஞ்சை தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.
சென்னையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:
தமிழக மக்கள் மனநிலை மட்டுமல்ல, இந்திய மக்களின் மன நிலையையும் கருத்தில் கொண்டு சிறப்பான ஒரு கூட்டணி அமைத்துள்ளது தமிழ் மாநில காங்கிரஸ்.
எங்கள் கட்சியின் முக்கியத்துவத்தையும், வளர்ச்சியையும் புரிந்துகொள்ள முடியாத, காங்கிரஸ்-திமுக கட்சிகளின் கூட்டணியுடன் நாங்கள் இணைவதற்கு விரும்பவில்லை. எனவே தமிழக மக்கள் விரும்பியபடி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளோம். இது தொடர்பாக வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு எங்கள் கூட்டணி பாடுபடும்.
நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டேன் என்று ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளேன். ஆர்கேநகர் இடைத்தேர்தலில் கூட, காங்கிரஸ் கட்சி இடம்பெற்ற கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெறவில்லை. எங்கள் கட்சியை பொறுத்த அளவில், தேசிய அளவில் அக்கறை கொண்ட மாநில கட்சியாகதான் செயல்பட்டுக் கொண்டு உள்ளது.
எங்களுடைய செயல்பாடுகள், எங்களுடைய முடிவுகள் எல்லாமே, தமிழகம் மற்றும் தேச நலன் அடிப்படையில் தான் அமையும். வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோஷம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தஞ்சை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.