சத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்
தஞ்சை: மிகச்சிறிய மாநிலமான சத்தீஸ்கரில் ஒரே போகத்தில் 80 லட்சத்து 40 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக தஞ்சை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் அங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ அதிகாரி அன்பழகன் என்கிறார்கள் விவசாயிகள்.
தஞ்சையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்த விவசாயிகள் இதுபற்றி கூறுகையில், "சத்தீஸ்கர் மாநில கூட்டுறவு விற்பனை இணையத்தின் முதுநிலை மேலாண் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த அன்பழகன் ஐஏஎஸ் உள்ளார்.
அவர் தலைமையிலான சத்தீஷ்கர் மாநில வேளாண்மை கூட்டுறவு விற்பனையகம் ஒரே போகத்தில் 80 லட்சத்து 40 ஆயிரம் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு அங்கு 68 லட்சம் நெல் கொள்முதல் தான் நிர்ணயித்து இருந்தது. அதையும் தாண்டி சின்னஞ்சிறிய மாநிலமான சத்தீஷ்கர் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் அந்த நெல்லை வெளிச்சந்தையில் விற்பனை செய்துள்ளது.
இதற்காக சத்தீஸ்கர் அரசு தமது மாநிலத்தின் நெல் விவசாயிகளுக்குக் குவிண்டாலுக்கு 750 ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்து அசத்தி உள்ளது" என்றார்கள்
இதனிடையே அதிகப்படியான நெல் கொள்முதல் செய்த சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஸ் போகலுக்குப் பாராட்டு தெரிவித்து, விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதனிடையே தமிழகத்திலும் அதிகப்படியான நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.