ஹைட்ரோகார்பனுக்கு எதிராக தஞ்சை, திருவாரூர் காவிரி டெல்டா கிராம சபைகளில் தீர்மானம்
தஞ்சை: ஹைட்ரோகார்பனுக்கு எதிராக தஞ்சை, திருவாரூர் காவிரி டெல்டா கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ள கிணறுகளை தோண்ட வேண்டும். இதற்கு அப்பகுதி மக்களின் கருத்துகளையும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியையும் பெற வேண்டியது அவசியமாக இருந்தது.
இதனால் மத்திய அரசு என்னதான் ஹைட்ரோ கார்பன் குறித்த திட்டங்களை அறிவித்தாலும் ஒன்று அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இல்லாவிட்டால் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காமல் போகிறது. இதை உணர்ந்த மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக புதிய அறிவிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. அதில் ஹைட்ரோகார்பன் திட்ட ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை.
அது போல் அந்த பகுதி மக்களின் அனுமதியும் கருத்துகளும் பெற தேவையில்லை என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு விவசாய அமைப்புகளும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றியது. தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையை அடுத்த கத்தரிநத்தம் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர், இருள்நீக்கி கிராமங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றின.
நாகை அக்கரைப்பேட்டையிலும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதை அதிகாரிகள் நிராகரித்தனர்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி பூலவாரி ஒன்றியத்தில் நடந்த கிராம சபையில் 8 வழி சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஊராட்சி பகுதியில் குடிநீரின்றி கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் ஆகவே இந்த பகுதியில் சீரான குடிநீர் வழங்க வழிவகை செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.