"இங்க சாதி, மதம் தான் முக்கியம்.. மனுஷன் இல்ல.. அப்படிதானே" லட்டர் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை
தஞ்சை இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
தஞ்சாவூர்: இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இந்த தற்கொலை வழக்கமான காதல் விவகாரத்தினால் இல்லை.. நாசமாய் போன கள்ளக்காதல் சமாச்சாரமும் இல்லை.. தனிப்பட்ட சொந்த சுய - விருப்புக்காகவும் இல்லை.. "இந்த சமுதாயத்தில் சாதிதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.. அதில் எனக்கு நம்பிக்கையில்லை.." என்று கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு... ஒட்டுமொத்த பேருக்கும் சம்மட்டி அடி தந்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் அருகே உள்ள திருக்கானூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பென்கர்.. இந்த இளைஞர் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். இவருடைய அம்மா அருள் சகாயராணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பென்கர் திடீரென ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. அந்த கடிதத்தை தன் அம்மாவுக்கு எழுதியுள்ளார்.. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உள்ள கடிதம் அது... அதில் உள்ள சுருக்கம் இதுதான்:
கடவுள் நம்பிக்கை
"அம்மா.. நீங்கள் என்னை வளர்ப்பதற்காக எடுத்து கொண்ட முயற்சிகள், அதற்காக நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் இதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.. என்னை சுற்றியுள்ள எல்லாருக்குமே இது தெரியும்.. கடவுள் இருக்கிறார் என்பதை நான் எந்த வகையிலும் நம்பவில்லை. அதே சமயம், தர்க்கரீதியான மற்றும் உணர்வு நிறைந்த முழு உண்மைகளை மட்டுமே நான் நம்பினேன்... குறைந்தபட்சம் நீங்கள் என்னைப் புரிந்துகொள்ள முயல்வீர்கள்.
சாதி - மதம்
இந்த சமூகம் மனிதனை பார்க்காமல் சாதி, மதம் பார்க்கிறது.. அதுபோலவே நீங்களும் உங்கள் சொந்த மகனின் மகிழ்ச்சியை பார்க்கவே இல்லை.. என் தரப்பை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள எனக்கு வாய்ப்பும் தரவில்லை... நான் கெமிக்கல் சாப்பிட்டுள்ளேன்.. அது என் ஒவ்வொரு உள் உறுப்புகளையும் நிச்சயம் சேதப்படுத்தி விடும்.
தானம்
அதனால் மிச்சமுள்ள உறுப்புகளை தானம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்... இதனால் மற்றவர்கள் பயன் பெற வேண்டும்.. கண்கள் இதனால் பாதிக்கப்படாது.. அதனால் என் கண்களை தானம் செய்துவிடுங்கள்.. வழக்கமாக நான் ரத்ததானம் செய்து வருபவன்.. இதுவரைக்கும் தண்ணி அடித்தது இல்லை.. சிகரெட் பிடித்தது இல்லை.. அதனால் என் உடலிலிருந்து தானம் செய்யக்கூடிய எதையும் பயன்படுத்த தயங்க வேண்டாம்.. என் உடம்பில் மிச்சம் மீதி இருந்தால் அதனை மின்சார கல்லறையில் சாம்பலாக இருக்கட்டும்.. இதுதான் என் கடைசி ஆசை.. இதையாவது நிறைவேற்றுங்கம்மா" என்று கடிதத்தில் எழுதியிருந்தார்.
தற்கொலை
இந்த கடிதத்தை வைத்து பார்க்கும்போது, அவர் படித்த கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரே கெமிக்கல் ஆசிட் கலந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. பென்கர் எப்போதுமே அன்பாக பழகக்கூடியவராம்.. சாதி, மதம் பார்க்க மாட்டார்.. இதேபோல் அப்படி பார்ப்பவர்களையும் பென்கருக்கு பிடிக்காதாம்.
கடிதம்
"என்ன இது.. இந்த சமுதாயத்தில சாதி மதம்தான் முக்கியமா? மனுஷங்களுக்கு மதிப்பே இல்லையா? மனிதனை மனிதனாக பார்க்கவே மாட்டார்களா" என்று வீட்டிலும், நண்பர்களிடமும் அடிக்கடி புலம்புவாராம்.. "இங்க சாதி, மதம் தான் முக்கியம்,மனுஷன் இல்லயே" என்று குமுறி கொட்டி கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பெற்ற தாயை ரொம்பவே உலுக்கிவிட்டது.. உண்மையிலே மிகச்சிறந்த ஒரு இளைஞனை.. நிஜமான குடிமகனை.. இந்த தமிழகம் இழந்துவிட்டது!