44 ஆண்டுகளுக்குப் பின் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவிலுக்கு வந்த நடராஜர்..பக்தர்கள் மகிழ்ச்சி
தஞ்சாவூர்: அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து 45 ஆண்டுகளுக்கு பின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் மீட்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகள் நேற்று அந்தந்த கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
வெளிநாடுகளில் இருந்து 10 க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா கொண்டுவரப்பட்டது. இதில் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான நடராஜர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
தஞ்சாவூர், இந்தியாவில் இருந்து கடத்தி வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட பழமை வாய்ந்த சாமி சிலைகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் நடவடிக்கையில் தொல்பொருள் ஆய்வாளர்களும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

தஞ்சை அருகே உள்ள சிறப்பு மிக்க புன்னைநல்லூர் மாரியம்மன் மற்றும் கைலாசநாதர் கோயிலில், கடந்த 44 ஆண்டுகளுக்கு முன் செப்பு சிலையை மாற்றி மோசடிசெய்துள்ளது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வந்த புகாரை அடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் நேற்று விசாரணையில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் கடந்த ''1974-ம் ஆண்டு, கொல்கத்தா விமான நிலையத்தில் ஐம்பொன்னால் ஆன 4 நடராஜர் சிலைகள் பிடிபட்டன. அந்தச் சிலைகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமானவை என்பது தெரியவந்தது. அதில் ஒன்று, தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்போதே தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், பிடிபட்ட ஒரு நடராஜர் சிலை, அமெரிக்காவில் உள்ள ஒரு மியூசியத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற சிலைகள் எங்கு இருக்கின்றன என்பது தெரியவில்லை. இதற்கிடையில், சிலைகள்குறித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், கோயில் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் எங்களது அறிவுரையைக் கேட்டு சரிபார்த்துள்ளனர். அப்போது, ஒரு நடராஜர் சிலையின் அமைப்பு மாறி இருந்தது. இதுகுறித்து அவர்கள், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், புன்னைநல்லூர் கோயிலுக்கு வந்து ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், அந்தச் சிலை தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 1974ஆம் ஆண்டில், அதாவது 44 ஆண்டுகளுக்கு முன், கோயிலில் இருந்த சிலையை மாற்றியது தெரியவந்துள்ளது. கடந்த 1972ஆம் ஆண்டு, கைலாசநாதர் கோயிலில் இருந்த சிலை திருடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள சிலையை எடுத்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஆனால், அதில் சிலவற்றைக் கடந்த 1974ஆம் ஆண்டு மாற்றி மோசடிசெய்துள்ளனர். அந்தச் சிலைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள்.. கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
கொல்கத்தாவில் சிலை பிடிபட்டபோது, அதில் திருவாச்சி உடைந்திருப்பது போட்டோவில் தெரிகிறது. ஆனால், இங்கு வைக்கப்பட்டுள்ள சிலையில் திருவாச்சி உடையாமல் உள்ளது. 44 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்திருப்பதால், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேரடியாக வழக்குப்பதிவுசெய்ய முடியாது. இதுகுறித்து டி.எஸ்.பி விசாரித்து, பின்னர் வழக்குப்பதிவுசெய்யப்படும். அந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்படும். அவ்வாறு மாற்றம்செய்த பின்னர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் உரிய விசாரணைசெய்து சிலையைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.
மத்திய,மாநில அரசுகளின் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு தஞ்சாவூர், நாகை, அரியலூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பழமையான கோயிலில் இருந்த திருட்டு போன 10 ஐம்பொன் சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிலைகளை அந்தந்த கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக தஞ்சாவூர் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலுக்கு 3 ஐம்பொன் சிலைகள் கொண்டு வரப்பட்டது. சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த்முரளி தலைமையில் ஐ.ஜி. தினகரன், எஸ்பி. ராஜாராமன், ஏடிஎஸ்பி மலைச்சாமி ஆகியோர் நேற்று கொண்டு வந்தனர். இவை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா ஆகியோர் முன்னிலையில் சிலைகளை ஒப்படைத்தனர்.
கடந்த 1966 - 1974 கால கட்டத்தில் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலில் இருந்து நடராஜர் சிலை கானாமல் போனது. இந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சிலை மீட்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கே கொண்டுவரப்பட்டு உள்ளது.
சிலைக்கு அலங்காரம் செய்து பல்லக்கில் சுமந்தவாறு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சிலை வந்ததால், அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பட்டாசுகள் வெடித்தும் மலர்கள் தூவியும் பக்தர்கள் வெளிப்பட்டனர்.