"கனி.. நீ சாகலேடா.. 7 பேர் உசுருல வாழ்ந்துட்டு இருப்பே".. மகளின் உறுப்பு தானம்.. நெகிழ்ந்த பெற்றோர்
பேராசிரியை உடல் உறுப்புக்கள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது
தஞ்சாவூர்: "கனி.. நீ சாகலேடா.. 7 பேர் உசுருல வாழ்ந்துட்டுதான் இருப்பே" என்று மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள் கனிமொழி... 25 வயது.. சின்ன வயசில் இருந்தே டீச்சராக வேண்டும் என்று கனவில் இருந்தவர்.
அதன்படியே நன்றாக படித்து முடித்தார்.. ஆசைப்பட்டபடியே தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியையாகவும் வேலை கிடைத்தது. மிகவும் மன நிம்மதியுடன் இந்த வேலையை கனிமொழி பார்த்து வந்தார்.
விபத்து
இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி வழக்கம்போல் காலேஜுக்கு போய் கொண்டிருந்தார்.. அப்போது, தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோட்டை கடக்க முயலும்போது, திடீரென கார் வந்து மோதிவிட்டது.. இந்த விபத்தில் ரத்தவெள்ளத்தில் கனிமொழி சாய்ந்தார்.. இதை பார்த்து பதறிய பொதுமக்கள் உடடினயாக ஓடிவந்து கனிமொழியை மீட்டு பக்கத்தில் உள்ள மீனாட்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் சொல்ல, அவர்கள் கனிமொழியின் வீட்டுக்கு விஷயத்தை சொன்னார்கள்.
மூளைச்சாவு
கனிமொழியின் தந்தை இளங்கோவன் உட்பட சொந்தக்காரர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு பதறியடித்து கொண்டு ஓடிவந்தனர்.. தீவிரமான சிகிச்சையும் நடந்தது.. ஆனால் கனிமொழி மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். தொடர்ந்து கனிமொழியும் கோமாவிற்கு சென்றுவிட்டார்.. இதை பார்த்து பெற்றோர் கதறினர்.. அவர்களால் இந்த விஷயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.
இரக்க குணம்
இறுதியில் டாக்டர்களிடம் பேசிய பெற்றோர், " என் பொண்ணு எல்லாருக்கும் உதவக் கூடியவள்.. இரக்க குணம் அதிகம்.. அதனால மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறோம்" என்று நெஞ்செல்லாம் துக்கம் அடைத்தபடி சொன்னார்கள். குடும்பத்தினரின் சம்மதத்தோடு மொத்தம் 7 பேருக்கு கனிமொழியின் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு சிறுநீரகம் தஞ்சை மீனாட்சி ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிக்கும், இன்னொரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் அளிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ்
கல்லீரல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், இதயம், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், கனிமொழியின் கண்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.இதற்காக கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு கொண்டு சென்று, அதன்பிறகு அங்கிருந்து ஃபிளைட்டில் மதுரை, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Recommended Video
தானம்
ஆனால் கனிமொழியின் தந்தை இளங்கோவன் அழுதபடியே உள்ளார்.. "ஆசை ஆசையா மகளை வளர்த்தேன்.. தொல்லியல் துறையில் நிறைய படிக்கணும்னு ஆசைப்பட்டாள்.. இன்னைக்கு உயிரோட இல்லை.. ஆனாலும், உதவின்னு தேவைப்பட்ட 7 பேரின் உடலிலும் வாழ்ந்து வருவாள்" என்று இவர் சொல்லும்போதே குரல் உடைந்து கம்முகிறது.. டீச்சராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டு... அதற்காக முயற்சி செய்து கவுரவ பேராசிரியையாக உயர்ந்திருக்கிறார் கனிமொழி.. எத்தனையோ பேருக்கு பாடம் கற்பித்த கனிமொழி, இன்று அவரது உடல் உறுப்புகளையே தானமாக தந்து விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளார்.. 7 பேர் ரூபத்தில் கனிமொழி டீச்சர் வாழ்ந்து கொண்டே இருப்பார்!