கஜா புயலால் சீர்குலைந்த கிராமம்.. உதவிகள் கிடைக்காததால் மறியல்.. சாலையில் சமைத்து போராட்டம்
தஞ்சாவூர் : கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் உரிய நிவாரணம் கிடைக்காததால் தஞ்சாவூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வெட்டிக்காடு அருகே உள்ள சில்லத்தூர் என்ற கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை அரசின் நிவாரண உதவி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதனை கண்டித்தும் உதவித்தொகை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியும் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கிராம மக்கள் காலை முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் பகுதிக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ள கிராம மக்கள் சாலையின் நடுவில் அடுப்புகளை அமைத்து சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.