ஆம்புலன்சில் ஏறும் வரை உங்க சொந்தம்.. ஏறிட்டா எங்க சொந்தம்.. தஞ்சையில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
தஞ்சாவூர்: அரசு ஊழியர்கள், அரசு மருத்துவமனைகள் என்றாலே லஞ்சம், மக்கள் புறக்கணிப்பு என்ற செய்திகளே கேள்விப்பட்டும் அனுபவித்தும் வரும் நிலையில் இது போன்ற நல்ல செய்திகளும் வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.. ஆம் தஞ்சையில் நடந்த இந்த சம்பவம் இன்று நீங்கள் படிக்கும் ஆகச் சிறந்த செய்தியாக இருக்க போகிறது!
எங்கோ.. யாருக்கோ நடக்கும் சில விஷயங்கள் நம்முடைய நாளை மிக அழகாக மாற்றும். அப்படித்தான் தஞ்சாவூரில் நடந்த விஷயம் ஒன்று தமிழக அரசின் மருத்துவ சாதனையை எடுத்துரைத்துள்ளது. இந்தியாவில் தமிழகம் மருத்துவத்தின் தலைநகராக திகழ்ந்து வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி உயர் ரக மருத்துவமனைகள் வரை அனைத்தையும் அரசு சிறப்பாக நடத்தி வருகிறது. அதற்கு உதாரணமாக தஞ்சாவூரில் இளைஞர் ஒருவர் மோசமான உடல்நிலையில் பாதிக்கப்பட்டு துரிதமான செயல்பாட்டால் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.
பார்ரா.. இதுல இப்படி ஒரு மேட்டர் இருக்கா.. மெக்காலேவை இதற்காகவே பாராட்டலாம்!
என்ன நடந்தது
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தை சுற்றிப்பார்க்க சென்ற இளைஞர் ஒருவர், உடல்நல குறைபாடு காரணமாக மயங்கி விழுந்துள்ளார். தஞ்சாவூரில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டுள்ளார். தான் காப்பாற்றப்பட்டது எப்படி என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக எழுதி இருக்கிறார்.
|
டிவிட் செய்துள்ளார்
அந்த இளைஞர் தனது டிவிட்டில், ''தஞ்சை பெரியகோவில் பார்க்க வேண்டுமென்பது பல ஆண்டு விருப்பம். நேற்று காலை கிளம்பி 11 மணிக்கு உள்ளே போயாயிற்று. சரியான வெயில். திடீரென தலை சுற்றி மயக்கம் வந்து விட்டது. மனைவியிடம் டாக்டர் (@spinesurgeon) அவர்களுக்கு போன் பண்ணச் சொல்லிவிட்டு அப்படியே படுத்து விட்டேன்.
ஆம்புலன்ஸ் வந்தது
அவர் உடனே 108ஐ அழைத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் எனச் சொன்னார். கோவிலுக்கு உள்ளேயே ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டு, தூக்கி செல்லப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். நீர் இல்லாமல் நீர்போக்கு (Dehydration) ஏற்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சர்க்கரை அளவின் காரணமாக மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
யாரும் இல்லை
உடனே ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். இப்போது ஊருக்கு வந்தாயிற்று. தஞ்சையில் எனக்குத் தெரிந்தவர்கள் இருவர் மட்டும்தான். ஆனால் அந்த இருவரும் கூட இப்போது சென்னையில் இருக்கிறார்கள். வேறு யாருமே தெரியாத ஊரில் மயக்கமாகி கிடக்கும் போது, 5 நிமிடத்தில் உதவிக்கு வரும் அளவிற்கு நம் தமிழ்நாட்டில் மருத்துவ சேவை உள்ளது.
நல்ல வசதி
ஆம்புலன்ஸிலேயே சலைன் ஏற்ற வசதி, ரத்த அளவு பரிசோதிக்கும் வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவமனை சென்ற உடனேயே ஈசிஜியும் எடுத்து விட்டார்கள். 108 வாகன செவிலியர், ஓட்டுநர் இருவரும் என்னுடைய மனைவி வற்புறுத்தி கொடுத்த பணத்தை கூட வாங்கவில்லை. சிகிச்சை முடிந்து வரும் போது அந்த வார்டில் உள்ளவர்களும் மறுத்து விட்டார்கள்.
செலவு இல்லை
ஒரு பைசா செலவில்லாமல் உலக தர மருத்துவம் எனக்கு தமிழக அரசின் மருத்துவக் கட்டமைப்பால் கிடைத்தது. அங்கேயுள்ள மருத்துவர்கள் 18 மணி நேரம் ஓய்வில்லாமல் சுற்றிச் சுழன்று பணியாற்றுகிறார்கள்.வரும் கேஸ்கள் எல்லாம் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே வருகிறார்கள். தமிழக மருத்துவ கட்டமைப்புக்கும் அதை சாத்தியப்படுத்திய திமுக/அதிமுக ஆட்சிகளுக்கும் ஒரு ராயல் சல்யூட்.
என்ன உருக்கம்
108 செவிலியர் என் மனைவி பணம் கொடுத்த போது சொன்னது "வண்டியில ஏறுற வரை உங்க சொந்தக்காரங்க. உள்ள வந்துட்டா எங்க சொந்தமாத்தான் நினைப்போம்". தாயே, உன் முகத்தை நான் பார்க்கவில்லை. உன் போல் இருப்பவர்களால்தான் அடுத்தவர்களுக்கு உதவி செய்து வாழ்தலே சிறப்பு என நினைவு வருகிறது, என்று அவர் தனது டிவிட்டரில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய உதாரணம்
தமிழகம் மருத்துவ துறையில் எவ்வளவு சிறந்து விளங்குகிறது என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம். இவர் தற்போது நலமாக இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார். ஒரு ரூபாய் காசு கூட இல்லாமல், உலக தர சிகிச்சை அளித்த தமிழக அரசு மருத்துவமனை நிர்வாகிகளுக்கு ஒரு மாஸ் சல்யூட் மக்களே!