என்னாது... தேமுதிகவுக்கு 4 சீட்டா ?... கொந்தளித்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்
Recommended Video
கும்பகோணம்: தே.மு.தி.க.வுக்கு 3 சீட், 4 சீட் ஒதுக்குவதற்கு நீங்கள் யார் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தடாலடியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை மத்தியமைச்சர் பியூஷ் கோயல், திருநாவுக்கரசர், ரஜினிகாந்த், ஸ்டாலின் என அடுத்தடுத்து சந்தித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது, விஜயகாந்தை சந்திக்காத தலைவர்கள், தேர்தல் நேரத்தில் சந்திப்பது அரசியல் இல்லாமல் வேறு என்ன? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
யாருடன் கூட்டணி
தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே நேரம், திமுகவும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பாமக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறும் என எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
3 சீட் யாருக்கு?
கும்பகோணத்தில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய விஜயபிரபாகரன், 3 சீட், 4 சீட் ஒதுக்குவதற்கு நீங்கள் யார் என்றார். தே.மு.தி.க.வுக்கு 2-3 சதவீதம் ஓட்டுகள் தான் என கூறுபவர்கள் விஜயகாந்தை ஏன் தேடி வருகிறார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்
அனல் பேச்சு
தே.மு.தி.க.வின் வலிமை சொந்த கட்சியினரை விட மற்ற கட்சிகளுக்கு தெரிந்துள்ளதாக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார். குகைக்குள் இருந்தாலும் சிங்கம், சிங்கம் தான் என்றும் பேசினார்.
ஆட்சி அமையாது
மேலும், காலையில் எழுந்து தமது தந்தை விஜயகாந்தின் முகத்தில் முழிக்கிறேனோ இல்லையோ, தினந்தோறும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தேடி வந்து விடுவதாக கூறினார். விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி அமையாது என்றும் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.