ஹைட்ரோகார்பன் விவகாரம்.. வாயில் சொல்லும் தமிழக அரசு செயலில் காட்டட்டும்.! பேராசிரியர் ஜெயராமன்
தஞ்சை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என சட்டம் இயற்றும் வரை போராட்டங்கள் தொடரும் என பேராசிரியர் ஜெயராமன் அறிவித்துள்ளார்.
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைகாரன்இருப்பில் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் தொடர் போராட்டங்களை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் காரணமாகவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி கிடையாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தெரிவித்துள்ளார் என பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார்.
இதற்கு முன்னால் இப்படி ஒரு திட்டமே கிடையாது என்று சொல்லியிருந்தார் அமைச்சர் சி.வி சண்முகம். தற்போது திட்டம் இருக்கிறது, ஆனால், தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என பேசுகிறார். ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு அனுமதி கொடுக்காமல் எவ்வாறு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான முதல்கட்டப் பணிகள் நடக்கின்றன என பேராசிரியர் ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றும் வரை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் ஓயவே ஓயாது என உறுதிபட கூறினார்.
மேலும் பேசிய அவர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என ஒரு புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிடலாமே. அல்லது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய அரசாணையே செல்லும் என அறிவிக்க வேண்டும். ஜெயலலிதா வெளியிட்ட அரசாணை மீத்தேன், நிலக்கரி திட்டங்களை ரத்து செய்தது. அது ஹைட்ரோகார்பனுக்கும் பொருந்தும் என தற்போது அறிவிக்கலாம்
ஒரு சிறப்பு சட்டம் இயற்றி காவிரி படுகையையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கைகளை செய்ய தமிழக அரசு தயங்குவதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் வாய்மொழியாக சொன்னதையே, ஒரு அதிகாரப்பூர்வ கடிதமாக மத்திய அரசுக்கு அனுப்பலாமே. எதற்காக தமிழக அரசு தயங்கி நிற்கிறது என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
வாய்மொழியாக கூறுவதை நிறுத்தி விட்டு தமிழக அரசு செயலில் காட்ட வேண்டும். மக்களை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்க போவதில்லை என்ற முடிவெடுத்து இனியாவது தமிழக அரசு நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என பேராசிரியர் ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார்.