குடிநீர், கரண்ட் இல்லை, உதவி செய்ய யாரும் வரலை.. நிர்க்கதியில் பேராவூரணி!
குடிக்க நீரும், சாப்பாடும் இன்றி தவிப்பதாக பேராவூரணி மக்கள் கூறுகிறார்கள்.
பேராவூரணி: 10 வருடமாகும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாங்கள் மீண்டு வர. அந்த அளவுக்கு சேதத்தை சந்தித்துள்ளோம் என்று பேராவூரணியிலிருந்து குமுறல் வெளிப்பட்டுள்ளது.
பேராவூரணி தாலுகா மொத்தமும் கஜா புயலால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை அங்கு உரிய அளவில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று சொல்கிறார்கள்.
கஜா புயலால் கடுமையான பாதிப்பை சந்தித்த மாவட்டங்களில் தஞ்சாவூரும் ஒன்று. அதிலும் பேராவூரணி தாலுகாவில் உள்ள பல ஊர்கள் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
லட்சக்கணக்கான மரங்கள், குறிப்பாக தென்னை உள்ளிட்டவை அடியோடு வீழ்ந்துள்ளன. சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை எடுக்க பல நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது. குடிநீர் கிடைக்கவில்லை. மின்சாரம் இல்லை.
பாதிக்கப்பட்ட பேராவூரணி
இதுகுறித்து பேராவூரணி அருகே உள்ள பொன்னாங்கண்ணிக் காடு என்ற ஊரைச் சேர்ந்த நமது வாசகரை தொடர்பு கொண்டு கேட்டபோது, விழுந்த மரங்களை இன்னும் எடுக்க முடியவில்லை. குடிநீர் சுத்தமாக இல்லை. சாலைகள் மோசமாக உள்ளன. தண்ணீர் தேடி மக்கள் குடத்துடன் அலையும் நிலையே உள்ளது.
[3 நாளாச்சு.. குடிக்க தண்ணீர் இல்லை.. சாப்பாடும் இல்லை.. குமுறும் பேராவூரணி மக்கள் ]
மறியல் நடக்கிறது
பஞ்சாயத்து போர்டில் கேட்டால் இப்போது வரும், அப்போது வரும் என்றுதான் சொல்கிறார்கள். குடிநீர் பாக்கெட் தருகிறார்கள். ஆனால் அது எந்த அளவுக்கு உதவ முடியும்? நிவாரணப் பணிகளுக்காக அதிகாரிகள் யாருமே இதுவரை வரவில்லை. இன்றுதான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருவதாக கூறியுள்ளனர். மக்கள் காலையிலிருந்து மறியல் செய்து வருகின்றனர்.
குழந்தைக்கு பால்
இன்று ஒரு பெண் தனது குழந்தையுடன் வந்து குழந்தைக்குக்கு கொடுக்க பால் சுட வைத்துத் தருமாறு கேட்டார். நாங்கள் பண்ணிக் கொடுத்தோம். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
நிவாரண பணிகள்
இந்த புயல் பாதிப்பு, சேதத்திலிருந்து நாங்கள் முழுமையாக மீள 10 வருடமாகும். அந்த அளவுக்கு மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளோம். எனது ஊர் மட்டுமல்ல, பேராவூரணி தாலுகா முழுவதுமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. நிவாரணப் பணிகள் விரைந்து நடந்தால் மக்களுக்கு பயன் தரும் என்று கேட்டுக் கொண்டார்.
வாசகர்களும் உதவலாமே?
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அத்தனை தொண்டுள்ளங்களும் அரசை எதிர்பாராமல் இதுபோன்று உதவியே போகாத பகுதிகளுக்குச் சென்று உதவிக் கரம் நீட்ட வேண்டியது மிக மிக அவசியம். நமது வாசகர்களும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மிகவும் நல்லது.