தஞ்சை அருகே வேதனை... இறந்தவரின் உடலை தகனம் செய்ய இடமில்லை... 2 நாட்களாக கிராம மக்கள் அவதி
தஞ்சை: தஞ்சை அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாததால் கிராம மக்கள் இரண்டு நாட்களாக தவிப்புக்கு உள்ளாகினர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திற்குட்பட்ட எடக்குடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலை விரிவாக்கம், வீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இறந்தவர்களின் புதைக்கவோ, எரிக்கவோ இடமில்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை தஞ்சை பள்ளிஅக்ரஹாரம் - களஞ்சேரி சாலையின் ஓரத்தில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்து இறுதி சடங்கு நடத்தி வந்தனர்.
சாலை விரிவாக்கம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக எடக்குடியில் சாலை ஓரங்களில் தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால், சுடுகாடு மறைந்தது. கிராமத்தில் உயிரிழந்தவர்கள் உடலை எரிக்க இடமில்லாமல் தவிப்புக்கு உள்ளாகினர். மேலும், மழை காலங்களில் மிகுந்த பிரச்சனை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
2 நாட்கள் தவிப்பு
கடந்த இரண்டு நாட்டுகளுக்கு முன்பு, எடக்குடி கிராமத்தை சேர்ந்த அம்சவள்ளி (50) என்பவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இறந்தவரின் உடலை தகனம் செய்ய இடம் இல்லாததால், வீட்டிலேயே வைத்திருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தற்காலிக தகன மேடை
இது தொடர்பாக கிராமமக்கள் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியானதால் தற்காலிகமாக தகனம் செய்ய இடம் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது.
நிரந்தர தீர்வு வேண்டும்
தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடம் நிரந்தர தீர்வாகாது என்றும் எடக்குடி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் நிரந்தர மின் மயானம் அமைத்து தர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை வைத்தனர். இருப்பினும், இறந்தவரின் உடலை தகனம் செய்ய இடமில்லாமல் 2 நாட்களாக கிராம மக்கள் அவதிக்கு உள்ளானது அப்பகுதியில் பரபரப்பான பேச்சாக இருந்தது.