தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீச்சு- தலைவர்கள் கண்டனம்
Recommended Video
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது மாட்டு சாணம் வீசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பாஜக, திருக்குறளே ஒரு இந்து சனாதான தர்மத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூல் என்கிறது. பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா இக்கருத்தை வலியுறுத்தி தமது ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
திருவள்ளுவர் அறிவுக்கடல்.. எந்த சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள்.. வைரமுத்து
விவாதப் பொருட்கள்
அதேபோல் பல்வேறு குறள்களை மேற்கோள்காட்டி இந்து தெய்வங்கள் இதில் இடம்பெற்றுள்ளன என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்காக்கப்பட்டு வருகின்றன.
வள்ளுவர் சிலை மீது சாணம் வீச்சு
இந்நிலையில் தஞ்சாவூர் வல்லம் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது மாட்டு சாணத்தை மர்ம நபர்கள் வீசியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் போராட்டம்
இச்சம்பவத்தைக் கண்டித்து பிள்ளையார்பட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தமிழர் விரோதமாக செயல்படும் சமூக விரோதிகளை போலீசார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
நடவடிக்கை தேவை
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பெ. மணியரசன், திருவள்ளுவர் மனித குலத்துக்கு பொதுவானவர். யாருக்கும் எதிரானவர் அல்ல. இச்செயல் கடும் கண்டனத்துக்குரியது. அவரது சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தலைவர்கள் கண்டனம்
மேலும் திருக்குறள் உலகப் பொதுமறை; உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கான தத்துவங்களை சொல்பது; அப்படிப்பட்ட திருக்குறளை தந்த திருவள்ளுவர் சிலையை அவமதிப்பது கண்டனத்துக்குரியது என தலைவர்கள் கூறியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, விழுப்புரம் எம்.பி.யும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளருமான ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
|
கனிமொழி கண்டனம்
திமுக மகளிர் அணி செயலாளரும் லோக்சபா எம்.பியுமான கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வள்ளுவர் சிலையை சேதப்படுத்தலாம். ஆனால் அதை செய்த மூடர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் என்பவர் சிலை மட்டும் இல்லை. வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம். சிலையை சேதப்படுத்தியவர்கள் மறைந்து மண்ணோடு போனபின்பும் வள்ளுவம் வாழும். இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.
மாணவர்கள் போராட்டம்
இதனிடையே திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் இன்று இப்போராட்டத்தை நடத்தினர்.
|
ஸ்டாலின் கருத்து
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது - தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
டி ராஜா எதிர்ப்பு
இச்சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறியுள்ளதாவது: திருவள்ளுவரின் பண்பாடு மகத்தானது; திருவள்ளுவரின் பண்பாடு தமிழரின் பண்பாடு. திருவள்ளுவரை இந்துத்துவவாதியாக்க பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் இந்த கடும் போக்கு கண்டனத்துக்குரியது. இவ்வாறு டி. ராஜா கூறியுள்ளார்.