எங்கிருந்தோ வந்தார்.. பள்ளங்களை நிரப்பினார்.. போய்க் கொண்டே இருந்தார்.. யாருங்க இவரு!
சாலைகளில் கற்களை கொட்டி ஒரு நபர் சீர் செய்து உள்ளார்.
தஞ்சை: இப்படி செய்யுங்கள் என்று யாருமே அவருக்கு சொல்லவில்லை... அவராகவே வந்தார்... செய்தார்... போய் கொண்டே இருந்தார்!
தஞ்சை மாவட்டத்தில் 2 நாளாக மழை ஊத்தி கொண்டு இருக்கிறது. அதாவது அதிகபட்சமாக 14.5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
இப்படி பெய்த மழையால் சாலையெல்லாம் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே கும்பகோணம் - தஞ்சை சாலையில் பள்ளங்கள் எக்கச்சக்கம். பார்ப்பதற்கே குண்டும் குழியுமாக சாலைகள் பல்லை இளித்து கொண்டு இருக்கும். இப்போது மழை வேறு பெய்து இன்னும் மோசமாகிவிட்டது.
[கஜா நிவாரணத்திற்கு மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே உதவி வருகிறது.. தமிழிசை விளக்கம்! ]
சாலையில் பள்ளங்கள்
பெரிய பெரிய பள்ளங்களில் மழை நீர் ஊருக்கு முன்னாடி ஓடிபோய் தங்கி விடுகிறது. அதனால் பள்ளம் என்று தெரியாமல் வண்டி ஓட்டிக்கிட்டு வருபவர்கள் எல்லோரும் விழுந்து வாரி கொண்டு போகிறார்கள்.
வேகமாக போனார்
இப்படி பொதுமக்கள் கீழே விழுந்து தட்டு தடுமாறி எழுந்து போவதை ஒருவர் பார்த்தார். அவர் ஒரு சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. ட்ரை சைக்கிள் ஓட்டி பிழைப்பை நடத்துகிறார். சைக்கிளை வேகமாக மிதித்து கொண்டு எங்கே போனார் என்றே தெரியவில்லை.
பள்ளங்களை மூடினார்
கொஞ்ச நேரத்தில் ட்ரை சைக்கிள் முழுசும் கற்கள். எல்லாத்தையும் கொண்டு வந்து பள்ளங்களில் போட்டார். இப்படியே பாபநாசம் முதல் திருப்பாலத்துறை வரைக்கும் 2 கிலோ மீட்டருக்கு கற்களை போட்டு பள்ளங்களை மூடினார்.
யார் என்றே தெரியவில்லை
இந்த தொழிலாளியின் செயலை ரோடு ஓரங்களில் கடை வைத்திருப்பவர்கள், சாலையில் போவோர், வருவோர் என அனைவருமே பாராட்டினர். ஆனால் அவர் யார் என்றே தெரியவில்லை. பெயர், ஊர் என எதுவுமே தெரியவில்லை. ஆனால் கற்கள் கொண்டு வந்து போட்ட அந்த ரோட்டில் நிறைய பேர் இப்பவும் போய் கொண்டுதான் இருக்கிறார்கள்.