கூட்டணிக்கு பலம் சேர்ப்போம்! சீட் எண்ணிக்கை எங்களுக்கு முக்கியமில்லை! அசராத ஜி.கே.வாசன்!
தஞ்சை: கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தங்களை பொறுத்தவரை எண்ணிக்கை முக்கியமில்லை என்றும் வெற்றிவாய்ப்பு இடங்களில் போட்டியிடுவதே முக்கியம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.
இன்று முதல்.. புயலென புறப்படும் ஜிகே வாசன்! கரையும் கட்சியை காப்பாற்ற முடியுமா? மாற்றி யோசிக்கனும்
நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் பரபரப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இதுவரை ஊடக வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி இருந்த மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன், தற்போது மீண்டும் நிர்வாகிகள் சந்திப்பு, ஊடகங்களுக்கு பேட்டி, கூட்டணிப் பேச்சுவார்த்தை என பிஸியாகி இருக்கிறார்.
கூட்டணிக்கு பலம்
இதனிடையே தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இன்னும் ஓரிரு நாட்களில் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அதிமுக கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் தங்கள் கட்சியின் செயல்பாடு இருக்கும் எனவும் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ்
மேலும், வெற்றி வாய்ப்பில்லாத இடங்களில் அதிக எண்ணிக்கையில் போட்டியிடுவதை விட உறுதியாக வெற்றி வாய்ப்பு இருக்கும் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விருப்பம் எனத் தெரிவித்திருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளை கேட்டுப்பெற்று அனைத்து தொகுதிகளிலும் ஜி.கே.வாசன் கட்சி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணி
அதிமுக பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் அதிக எண்ணிக்கையில் வாசன் இடப்பங்கீடு கேட்டாலும் கூட, தலா 2 வார்டுகள் மட்டுமே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.