கொரோனாவால் உயிரிழந்த பாஜக பிரமுகர் உறவினர்... நல்லடக்கம் செய்த தமுமுக... மதம் கடந்த மனிதநேயம்
தஞ்சை: தஞ்சையில் கொரோனாவால் உயிரிழந்த பாஜக பிரமுகர் உறவினர் உடலை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்து இறுதி மாரியாதை செலுத்தினர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பண்ணைவயலை சேர்ந்தவர் கருணாநிதி. தஞ்சை மாவட்ட பாஜக பிரமுகர் இளங்கோவின் உறவினரான இவர் கொரோனா பாதிப்பு காரணமாக தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் சுகாதாரத்துறை விதிமுறைகளின் படி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனிடையே தஞ்சையில் அடக்கம் செய்ய விரும்பாத கருணாநிதி உறவினர்கள், சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகே உள்ள பண்ணைவயலில் அடக்கம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வைக்கக்கூடாது என்பதாலும், அதனை எடுத்துச்செல்ல நடைமுறைச் சிக்கல் உள்ளதாலும் மருத்துவமனை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு- அதிபர் ஹாசன் ரவுகானி அதிர்ச்சி தகவல்
இதையடுத்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் தன்னார்வலர்கள், கொரோனாவால் உயிரிழந்த நபரை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளனர். இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உறவினர்களுக்கு இருந்தாலும் நோய் பரவல் குறித்த அச்சமும், தயக்கமும் இருந்ததால் அவர்களை அஞ்ச செய்தது.
மதமாச்சரியங்களை கடந்த இந்த தொண்டுக்கு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி மக்களிடையே பாராட்டு கிடைத்துள்ளது. தஞ்சை மட்டுமல்லாமல் கோவையில் உயிரிழந்த கரூரை சேர்ந்தவர் உட்பட பல இடங்களில் மனிதநேயத்துடன் மதத்தை கடந்து தமுமுக தன்னார்வார்லர்கள் தொடர்ந்து இது போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.