இந்தியை திணிக்க முயன்றால் வேடிக்கை பார்க்க மாட்டோம்.. போராட்டம் வெடிக்கும்.. முத்தரசன் எச்சரிக்கை
Recommended Video
தஞ்சை: மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் உறுதிமொழியை மீறி இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணித்தால், மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை வரைவில் நாடு முழுவதும் இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக தமிழர்கள் இதனை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முத்தரசன், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று தேர்தல் அறிக்கையிலேயே தெளிவாக பாரதிய ஜனதா கட்சி சொல்லியுள்ளது.
ஆனால் இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களால் இதனை ஏற்று கொள்ள முடியாது. முன்னாள் பிரதமர் நேரு இந்தியை விரும்பாத மாநிலங்கள் மீது அம்மொழியை மத்திய அரசு திணிக்காது என முன்பு உறுதியளித்திருந்தார்.
இந்த உறுதிமொழிக்கு மாறாக இந்தியை விரும்பாத மாநிலங்கள் மீது அதனை திணித்தால், கடும் விளைவுகளை மத்திய அரசு சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். 1965-ம் ஆண்டில் தமிழகத்தில் வெடித்த இந்தி எதிர்ப்பு போராட்டம் போல, தற்போதும் வெடிக்கும் என குறிப்பிட்டார்.
என்னங்க.. பாஜக அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர்தானா.. தேட வேண்டியதால்ல இருக்கு!
மேலும் பேசிய அவர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்பட்ட அனைத்து கட்சி போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றார். டெல்டா மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் - சென்னை இடையிலான 8 வழிச்சாலைக்காக விவசாய நிலங்களை, அனுமதியில்லாமல் அரசே பறித்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டினார். எட்டு வழிச்சாலையை எதிர்த்து 5 மாவட்டங்களில் போராடிய ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது, பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் திருப்பி தர உத்தரவிட்டது.
ஆனால் இடையில் தேர்தல் வந்து விட்டதால் அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே தேர்தல் முடிவுகள் வந்து மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது மக்களை வஞ்சிக்கும் செயல் என கடுமையாக சாடினார் முத்தரசன்.
விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலங்களை அவர்களிடமிருந்து பறித்து, அந்த விளைநிலங்களில் 8 வழிச்சாலை அமைக்க முற்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என முத்தரசன் ஆவேசமாக கூறினார். சேலம் - சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடாவிட்டால், விவசாயிகளுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போராடும் என்றார் முத்தரசன்.