தஞ்சை: கூலி தொழிலாளி மீது வன்முறை வெறியாட்டம் - தொல். திருமா, ரவிக்குமார் கண்டனம்
தஞ்சை அம்மாபேட்டையில் தலித் இளைஞர்மீது வன்கொடுமை செய்த சாதி வெறியர்களைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாரும் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர்: அம்மாப்பேட்டையில் நடந்துள்ள சாதிவெறியாட்டம் தமிழகத்திற்கு நேர்ந்துள்ள தலைகுனிவாகும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இழிசெயலில் ஈடுபட்டோரைக் குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருமாவளவன்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் வசித்து வருபவர் ராகுல், இவர் ஒரு நபரிடம் கூலிக்கு வேலை பார்த்து வருகிறார். அவரது வீட்டில் பணத்தை திருடியதாக ஒரு கும்பல் இவரை சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலானது. அதில், ராகுலின் கண்ணைக் கட்டிய கும்பல் கம்பை எடுத்து அவரை கதற கதற தாக்குகிறது. மரத்தில் கைகளை பிடிக்க வைத்து இரண்டு பேர் பிடித்துக் கொண்டு அந்த இளைஞரின் பின் பக்கத்தில் அடிக்கிறது அந்த கும்பல்.
அண்ணே என்னை விட்ருங்க என ராகுல் கெஞ்சியும் அடிப்பதை நிறுத்த மறுத்த அந்த கும்பல், ராகுலை குனிய வைத்து காலில் கம்பை வைத்து அடிக்கின்றனர். காவல் நிலையத்தில் லாக்அப் அடியை நினைவுபடுத்துகிறது இந்த சம்பவம்.
ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாத ராகுல், அங்கேயே மயங்கி விழுந்தாலும் விடாமல் அடிக்கின்றனர். ராகுலை அந்த கும்பல் தாக்குவதை வீடியோ எடுத்த கும்பலின் தலைவன், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்,அம்மாப்பேட்டை யில் நடந்துள்ள சாதிவெறியாட்டம் தமிழகத்திற்கு நேர்ந்துள்ள தலைகுனிவாகும். காவல்துறை வழக்கம்போல மெத்தனம்காட்டுவது வெட்கக்கேடாகும். தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இழிசெயலில் ஈடுபட்டோரைக் குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் திருமாவளவன்.
அண்ணே விடுங்க...கதறியும் விடாமல் அடித்த மிருக குணம் படைத்த இளைஞர்கள் - ரத்தக்கண்ணீர் வரும் வீடியோ
தலித்துகள் மீதான வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தாமல் மறைமுகமாக ஊக்குவிக்கிறதா அதிமுக அரசு? காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் அவர்கள் தஞ்சை அம்மாபேட்டையில் தலித் இளைஞர்மீது வன்கொடுமை செய்த சாதி வெறியர்களைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று எம்பி ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.