பச்சை கலர் முண்டாசு.. புலியுடன் போஸ்.. ஹைட்ரோ கார்பன் போராட்டத்துக்கு சிறுவன் அழைப்பு
மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி சிறுவன் அழைப்பு விடுத்துள்ளான்
Recommended Video
தஞ்சாவூர்: "உலகத்துக்கே சோறு போட்ட தஞ்சாவூர் இருக்கு இல்லை.. அங்கே ஹைட்ரோ கார்பன் எடுக்க போறாங்களாம்.. அதை தடுத்து காப்பாத்த நாமெல்லாம் போலாமா?" என்று சிறுவன் ஒருவன் வீடியோ மூலம் நமக்கு அழைப்பு விடுத்துள்ளான்.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிடவில்லை.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்த விவசாயிகள் தரப்பு முடிவு செய்தனர்.
இதற்காக காவல்துறை அனுமதி அளிக்க உத்தரவிட கோரி பட்டுக்கோட்டையை சேர்ந்த லெனின் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுவையும் தாக்கல் செய்தார். இது சம்பந்தமான விசாரணை நடைபெற்றபோது, வருகிற 23-ம் தேதி மனித சங்கிலி நடத்த கோர்ட் அனுமதி தந்துள்ளது.
இந்த மனித சங்கிலி போராட்டத்துக்குதான் ஒரு சிறுவன் பொதுமக்களை பங்கேற்கும்படி அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளான். இவனுக்கு 5 வயசாகிறது.. பெயர் பிரபாகரன்.. தலையில் பச்சை கலர் முண்டாசு கட்டி உள்ளான். இரு பக்கமும் புலி பொம்மைகளை வைத்து கொண்டு வெற்று உடம்புடன் உட்கார்ந்திருக்கிறான்.
அதில், "அனைவருக்கும் வணக்கம்.. உலகத்துக்கே சோறு போட்ட தஞ்சாவூர் இருக்கு இல்லை.. அங்கே ஹைட்ரோ கார்பன் எடுக்க போறாங்களாம்.. அதை தடுத்து.. எங்களை எல்லாம் காப்பாத்த.. நாமெல்லாம் போலாமா? நாள்.. ஜுன் 23, அன்னைக்கு மனித சங்கிலி போராட்டம், காலை முதல் மாலை வரை.. எங்களுக்கு மீத்தேன் வேணாம்.. ஹைட்ரோ கார்பன் வேணாம்.. விவசாயத்தை காப்போம்" என்று மழலை தமிழில் நம் அனைவருக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறான்!