நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்.. கைவிட மறுத்ததால் கொன்றோம்.. கைதான 6 பேர் திடுக் தகவல்
தஞ்சாவூர்: நீடாமங்கலம் அருகே வாலிபர் ராஜா என்பவரின் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நண்பனின் மனைவியுடன் கள்ளக்தொடர்பில் இருந்த காரணத்தால் கொலை செய்ததாக கைதான 6 பேர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள சேர்மாநல்லூர் நேதாஜி காலனியில் வசிப்பவர் ராஜா(வயது28). நேற்று முன்தினம் மாலை, தனது நண்பர் சதீசுடன் மோட்டார் சைக்கிளில் ராஜா சென்றுள்ளார்.
அப்போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவரது மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்து அவர்களை தள்ளிவிட்டனர். சுதாரித்து எழுந்து ராஜாவும் சதீசும் ஓடினார்கள். அப்போது சித்தமல்லி பகுதியில் உள்ள வயலில் வைத்து ராஜாவை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்றனர். தடுக்க வந்த சதீசுக்கும் அரிவாள் விட்டு விழுந்தது
கொலை வழக்கு
இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கம்பந்தங்குடி மேட்டுத்தெருவை சேர்ந்த முருகேசன்(வயது42), அம்மாப்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த ஆனந்தபாபு(29), கம்பந்தங்குடி ரோட்டுத்தெருவை சேர்ந்த நந்தகுமார்(20), கம்பந்தங்குடி நடுத்தெருவை சேர்ந்த சுதாகர்(22), அன்னப்பன்பேட்டை விண்ணுக்குடி பகுதியை சேர்ந்த கோபி(27), வலங்கைமான் தாலுகா பாடகச்சேரி சூரக்குடி தெருவை சேர்ந்த அருண்பாண்டி என்ற பிரகாஷ்(30) ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.
கைவிட மறுப்பு
அவர்களிடம் போலீசார் ராஜாவை கொன்றது ஏன் என்பது குறித்து விசாரித்தனர். அப்போது கிடைத்த தகவலின் படி, தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நேதாஜி காலானியைச் சேர்ந்த ராஜா(எ) சண்முகராஜாவுக்கும் அம்மாப்பேட்டை அருகே உள்ள சம்மந்தங்குடி கிராமத்தில் உள்ள திருமணம் ஆன பெண் ஒருவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது.
மணல் திருட்டு
அவருக்கு தெரிந்தவர்கள் ராஜாவிடம் பலமுறை சொல்லியும் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்துவிட்டாராம். இந்த விவகாரத்தில் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ராஜா மீது வழக்கு உள்ளதாம். இது ஒரு புறம் எனில் இன்னொரு காரணம் மகிமாலை என்ற இடத்தில் கைதான 6 பேரும், மணலை திருடி அதிகவிலைக்கு விற்பார்களாம். இதற்கும் ராஜா இடையூறாக இருந்தாராம்.
திட்டமிட்டு கொலை
நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல், மணல் திருட்டுக்கு இடையூறு போன்ற காரணங்களால் ராஜாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இந்நிலையில் நகர் கிராமத்திற்கு நண்பர் சதீஷ் உடன் பைக்கில் சென்று மது அருந்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து வந்த போது மோட்டார் சைக்கிளில் சுற்றி வளைத்த இந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. வயலில் விழுந்து ஓடிய ராஜாவின் தலை, கை, கால் என பலமுறை வெட்டியது. ரத்த வெள்ளத்தில் ராஜா பலியானார்.அவரது நண்பர் சதீஸ் படுகாயம் அடைந்தார். இந்த கொலை விவகாரம் நீடாமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.