அதிமுகவில் இணைவாரா சசிகலா.. பாஜகவுக்கு சம்மதமா.. சி.டி.ரவி சொன்ன பதில் இதுதான்!
தஞ்சை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பது குறித்த கேள்விக்கு 'மறுக்காமல்' பதிலளித்துள்ளார், தமிழக பாஜக மாநில சட்டசபை தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி பேட்டி.
Recommended Video
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி.
இதன்பிறகு அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார். சி.டி.ரவி கூட்டணி குறித்தும் பிற விஷயங்கள் குறித்து கூறியதை பாருங்கள்:
மோடி திட்டங்கள்
தமிழகத்திற்கு பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை அளித்து உள்ளார். அவரே தனது கைகளால் தொடங்கி வைத்துள்ளார். காங்கிரஸ் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருந்தது ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அதனை நடத்துவது பாஜக அரசுதான். காங்கிரஸ்அரசு அதனை தடை செய்தது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.
பாஜக நண்பன்
இதிலிருந்து யார் தமிழகத்திற்கு நண்பன் யார் தமிழகத்திற்கு எதிரி என்பது தெரிகிறதா? தேசிய ஜனநாயக கூட்டணி தமிழர்களின் நண்பன். பாஜகதான் உங்கள் நண்பன். காங்கிரஸ் மற்றும் திமுக தமிழர்களின் எதிரிகள்.
திராவிட கலாச்சாரம்
திராவிட கலாச்சாரம் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஊழல் தான் திராவிட கலாச்சாரமா? கடவுளை அவமதிப்பது தான் திராவிட கலாச்சாரமா, பாஜக வரும் சட்டமன்றத் தொகுதியில் எத்தனை சீட்டுகளில் போட்டியிடப் போகிறது என்பது இதுவரை முடிவாகவில்லை. கட்டாயமாக இரட்டை இலக்க இடத்தை கேட்டு பெறுவோம்.
இரட்டை இலக்கு
அதிமுக தமிழகத்தின் கூட்டணியின் பெரிய கட்சியாக உள்ளது. சட்டமன்றத்திற்கு இரட்டை இலக்கத்தில் உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் என்பதே எங்களது இலக்கு. காங்கிரஸ் கட்சி தேசத்தை பிளவுபடுத்துகிறது. காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி. நாட்டில் பெட்ரோல் உற்பத்தி என்பது அதிக அளவு இல்லை. 87 சதவீத எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விலையை உலக சந்தையில் தான் தீர்மானிக்கின்றன.
அதிமுகவில் சசிகலா
இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் மூத்த தலைவர்கள் அவர்கள் அதிமுகவை வழிநடத்துகிறார்கள். சசிகலாவின் பலம் என்பது குறைவாக உள்ளது. சசிகலாவை கட்சியை சேர்ப்பது அதிமுக உள்கட்சி விவகாரம். ஆனால் நாங்கள் அதிமுக பக்கம் உள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பது குறித்து எங்கள் கூட்டணியின் மிகப் பெரிய கட்சியான அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு சிடி ரவி தெரிவித்தார். ஆக மொத்தம் சசிகலா விஷயத்திலும், அமமுக விஷயத்திலும் அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும் என கூறிவிட்டார் சிடி ரவி.