கோயிலுக்குள் அதிமுக கோ பூஜை.. திடீரென எட்டி எட்டி உதைத்த மாடு.. சிதறி ஓடிய பக்தர்கள்
கோயிலில் பூஜையில் இருந்த மாடு முட்டியதில் ஒருவர் படுகாயமடைந்தார்
Recommended Video
கும்பகோணம்: தமிழகம் முழுவதும் குடிநீர் கேட்டு திமுகவினர் ஒரு பக்கம் போராட்டம் செய்து கொண்டிருந்தால், இன்னொரு பக்கம் அதிமுக யாகம் நடத்தி வருகிறது. இப்படி யாகம் நடத்தப்பட்ட ஒரு கோயிலில் மாடு ஒன்று மிரண்டு போய் எட்டி உதைத்ததால் நாலாபக்கமும் பக்தர்கள் தலைதெறித்து ஓடினார்கள்!
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மழைவேண்டி அந்தந்த மாவட்டங்களில், அமைச்சர்கள், இன்று யாகம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டு இருந்தது. அதன்படியே கோயில்களில் பூஜைகளும், யாகமும் நடந்து வருகின்றன.
கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் வருண ஜபம மற்றும் யாகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த வருண ஜபம் மற்றும் யாகத்தில் அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
அப்போது கோ பூஜை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம், திடீரென மாடு மிரண்டு விட்டது. பூஜையிலிருந்த மாடு மிரண்டு, அங்கிருந்தவர்களை காலால் உதைத்தது... போய் போய் முட்டியது.. இதில் கோயிலுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பூஜையில் கலந்து கொண்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இப்படி மாடு முட்டியதில் விக்னேஷ் என்ற இளைஞருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணு அஸ்வ பூஜை கஜ பூஜையில் கலந்து கொண்டார்.