பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் எது தெரியுமா?.. ஆய்வு முடிவைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான் என்கிறது புதிய ஆய்வு.
வாஷிங்டன்: பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக வெளி இடங்களைக் காட்டிலும் வீடே இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
வீட்டைத் தாண்டி வெளியில் சென்றாலே பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக் குறி தான் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. இதனை உறுதி செய்வது போல், ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது, பெண்களை வெளியிலேயே விடாமல் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கலாம் என நினைப்பவர்களுக்கு ஷாக் தருகிறது இந்த ஆய்வு முடிவு. ஆம், வெளியிடங்களைவிட வீடு தான் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் எனத் தெரிய வந்துள்ளது.
ஐநா ஆய்வு:
இது தொடர்பாக சமீபத்தில் பெண்களுக்கு ஆபத்தான இடம் எது என்ற தலைப்பில் ஐநா ஆய்வு ஒன்றை நடத்தியது. தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, பெண்களுக்கு தங்கள் வீடுதான் மிகவும் ஆபத்தான இடம் என ஐநா கூறுகிறது. இந்த ஆய்வில் பொதுவாக பெண்கள் பற்றிய ஏகப்பட்ட உளவியல் குறிப்புகளும், இன்ன பிற விஷயங்களும் அடங்கியுள்ளன.
அதிர்ச்சி முடிவுகள்:
கடந்த ஓராண்டு காலத்தில் கொலை, பலாத்காரம், துன்புறுத்தல், சீண்டல் உள்ளிட்டவை கொடுமைகளுக்கும் ஆபத்தான அச்சுறுத்தல்களுக்குன் ஆளான பெண்களில், சரிபாதி பெண்கள் தங்கள் கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களாலேயே இந்த இன்னல்களுக்கும் ஆபத்துக்களுக்கும் ஆளாகியுள்ளதாக இந்த ஆய்வுக்குழு அதிர்ச்சி முடிவுகளை முன்வைத்துள்ளது.
வீடே காரணம்:
இது தொடர்பான புள்ளிவிவரத்தை ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ளது. ஆகையினால் இந்த ஆய்வு முடிவுகளின்படி, பெண்களுக்கு வீடே மிக ஆபத்தான இடம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு கொல்லப்பட்ட சுமார் 87 ஆயிரம் பெண்களில், சுமார் 58 சதவீதம் அதாவது 50 ஆயிரம் பேர் குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
ஆசியா தான் டாப்:
இந்த ஆய்வின் படி, உலகளவில் ஆசியாவில் தான் பெண்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே அதிகளவில் கொல்லப்படுவது அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு மட்டும் 20 ஆயிரம் பெண்கள் ஆசியாவில் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆப்ரிக்காவும், மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளது. இங்கு முறையே 19 ஆயிரம் மற்றும் 8 ஆயிரம் பெண்கள் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.