ஏழைகள் இருவரின் உயிரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்- கணவனை இழந்த பெண்கள் கலெக்டரிடம் மனு
கள்ளச்சாராயம் குடித்து ஏழைகள் மரணமடைவதால் சாராய வியாபாரியை கைது செய்யக் கோரி உயிரிழந்த நபரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தேனி: ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகள் திறந்து மது ஆறாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஆண்டிபட்டி அருகே மது போதையில் சகோதரர்கள் அடுத்தடுத்து மது குடித்து மரணமடைந்தனர். இருவரின் மரணத்திற்கும் கள்ளச்சாராயம்தான் காரணம் என்றும் கள்ளச் சாராய வியாபாரியை கைது செய்ய வேண்டும் என்று உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி அமுதா தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் ரமேஷ்,39,முனீஸ்வரன்,33, ஜோதிலட்சுமணன்,31 மற்றும் பாண்டியன்,29 ஆகியோர் அந்த ஊரில் நடந்த கோயில் திருவிழாவிற்காக அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்து மனைவி சமைத்துப் போட்ட பிரியாணியை உண்ட சிறிது நேரத்தில் லதா என்பவரின் கணவர் பாண்டியன் துடிதுடித்து பலியானார்.
பின்னர் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பிணத்தை வைக்கக் கூடாது என்று கருதி அவசர அவசரமாக பாண்டியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அடுத்தடுத்த மரணம்
தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக பாண்டியனின் மனைவி லதா அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி வருவாய் வட்டாட்சியர் மட்டும் கோட்டாட்சியர் முன்னிலையில் பாண்டியனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை செய்து முடித்து உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் பாண்டியனுடன் மது அருந்திய அவரது இன்னொரு சகோதரரான ரமேஷ்,39ஆம் மரணமடைந்தார்.
உயிருக்கு போராட்டம்
அவர்களுடன் மது அருந்திய மற்ற இரண்டு சகோதரர்களான ஜோதிலட்சுமண் மற்றும் முனீஸ்வரன் ஆகிய இருவரும் உடல்நிலை மோசமாகி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தான் இரண்டு பேர் உயிரிழந்ததற்கு மற்றும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதற்கும் காரணம் அவர்கள் அருந்திய மது தான் என்பது தெரியவந்தது.
கள்ளச்சாராயம்
டாஸ்மாக் மதுக்கடையில் வாங்கிய மது அருந்தவில்லை என்றும் அந்த ஊரில் சாராய வியாபாரம் செய்து வரும் ஜெயராம் என்பவரிடம் மது அருந்தியதாகவும் தெரியவந்துள்ளது. மரணமடைந்த ரமேஷின் உடலுடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பல்வேறு தரப்பினரும் சமாதானம் செய்து அவரது உடலை அடக்கம் செய்தனர்.
கலெக்டரிடம் மனு
இந்நிலையில் முதலில் உயிரிழந்த பாண்டியனின் மனைவி லதா என்பவர் கடந்த 10ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தனது கணவரின் சாவுக்கு காரணமான சாராய வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.
சாராய வியாபாரியை கைது செய்யுங்க
இந்நிலையில் இன்று, உயிரிழந்த ரமேஷின் மனைவி அமுதா தனது 14 வயது பெண்குழந்தை ஐஸ்வர்யா மற்றும் 4 வயது ஆண் குழந்தை நித்தீஷ் ஆகியோருடன் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்து சாராய வியாபாரி ஜெயராமை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
உயிரைக்கொல்லும் நஞ்சு
சாராயம் என்பதில் நல்ல சாராயம் என்றும் கள்ளச்சாராயம் என்றும் பிரித்துப் பார்க்க தேவையில்லை. இரண்டுமே உயிரைக் கொல்லும் நஞ்சு தான்.
மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இது போன்று சாராயத்தைக் குடித்து உயிரை விட்டு குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுச்செல்லும் நபர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். முதலில் மதுக்கடைகளை அரசு தடை செய்ய வேண்டும். ஜெயராம் போன்ற சாராய வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்.