கிரிக்கெட் பேட் வேணும்...குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டே உதயநிதியிடம் மனு கொடுத்த சிறுவர்கள்
தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலினிடம் குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டே மனு கொடுத்தான் ஒரு சிறுவன். அவனது கோரிக்கை கிரிக்கெட் பேட் வேண்டும் என்பதுதான்.
தேனி: தேர்தல் பிரச்சாரத்திற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு வந்த உதயநிதி ஸ்டாலினிடம் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் பேட் கேட்டு மனு கொடுத்துள்ளனர். அதிலும் ஒரு சிறுவன் குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டே கிரிக்கெட் பேட் வேண்டும் என்று கேட்டு கலகலப்பை ஏற்படுத்தினான்.
தேனி மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆண்டிப்பட்டி அருகே பிரச்சாரத்துக்கு வந்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் தங்களுக்கு கிரிக்கெட் பேட் வேண்டும் என கேட்ட சிறுவர்களால் கலகலப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டிக்கு வந்திருந்த உதயநிதி ஸ்டாலின், பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு காரில் கிளம்பினார். கன்னியப்பபிள்ளைப்பட்டி என்ற கிராமத்தின் அருகே அவரை சந்தித்த சிறுவர்கள் சிலர், கையில் துண்டுச் சீட்டு ஒன்றை கொடுத்தனர்.
அதில் தங்களுக்கு கிரிக்கெட் விளையாட பேட் தேவை என்றும், அதனை தாங்கள் வாங்கித் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டே மனு கொடுத்த சிறுவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவர்கள் கொடுத்த மனுவைப் பெற்றுக்கொண்டு பேட் வாங்கித் தருவதாகக் கூறிய உதயநிதி ஸ்டாலின் சிறுவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.