13 வயசு பிஞ்சை.. கல்யாண ஆசை காட்டி சீரழித்த காமுகன் ஈஸ்வரனுக்கு 10 வருஷம் ஜெயில்
தேனி: 13 வயது சிறுமியை கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சீரழித்த ஈஸ்வரன் மற்றும் அவரது நண்பன் பாரதி ஆகியோருக்கு 10 வருஷம் ஜெயில் தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஈஸ்வரன். கடந்த 2015 ஆம் வருடம் கம்பம் பகுதியில் உள்ள 13 வயது பள்ளி சென்ற சிறுமிக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். பின்னர் சிறுமியை அவரது நண்பர் பாரதி உதவியுடன் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு பாரதியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின் பேரில் கம்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது பெரியகுளம் அருகே உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையானது அனைத்தும் முடிவடைந்த நிலையில் மகிளா நீதிமன்றம் நீதிபதி கீதா இன்று தீர்ப்பு வழங்கினார். தனது தீர்ப்பில் 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஈஸ்வரனுக்கு போஸ்கோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அதை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல் பாலியல் வன்கொடுமைக்கு உதவிய அவரது நண்பர் பாரதி சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் போலீசார் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்