வசூல்ராஜா பாணியில்.. நீட் தேர்வே எழுதாமல் எம்பிபிஸ் சேர்ந்த மாணவர்.. தேனி மெடிக்கல் காலேஜில் ஷாக்
தேனி: கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே நடத்தப்படும் நீட் தேர்வில் மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து மற்றொருவரை எழுத வைத்து வெற்றி பெற்ற மாணவர், தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.. இந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எம்பிபிஎஸ் படிக்க ஆசைப்பட்ட சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருக்கிறார்.ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் கமல் நடித்த வசூல்ராஜா படப்பாணியில் ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரை எம்பிபிஸ் நுழைவுத்தேர்வு (நீட் தேர்வு) எழுதவைக்க அந்த மாணவர் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் ஆள்மாறாட்டம் செய்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று எண்ணி மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்வு மையத்தை தேர்வு செய்ததாக கூறப்பபடுகிறது. இதன்படி வேறு ஒருவரை நீட் தேர்வு எழுதவும் வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற அந்த மாணவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு இடம் கிடைத்துள்ளது. இதன்படி தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துவந்த மாணவர் மீது ஆள்மாறாட்ட புகார்கள் வந்தது.
பெருமாளே.. பாய்வீட்டு கல்யாண பத்திரிகை மட்டும் வந்துரக் கூடாது.. தெறிக்கும் மீம்ஸ்கள் #புரட்டாசி
புகாரைத் தொடர்ந்து ஹால் டிக்கெட் புகைப்படமும், மாணவரின் புகைப்படமும் மாறுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தேனி மருத்துவக் கல்லூரி விசாரணைக்காக மாணவரின் ஆவணங்களை சுகாதாரத்துறையின் ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நுழைவுத் தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் நடந்ததா என சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. ஆள்மாறாட்ட சந்தேகம் எழுந்தபின் சம்பந்தப்பட்ட மாணவர் மருத்துவக் கல்லூரிக்கு வரவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணைக்கு பின்னர் உண்மை தெரியவரும் என கூறப்படுகிறது.