தேனியில் ஓபிஎஸ்சை வெளுத்து வாங்கிய உதயநிதி.. கையோடு வெளியிட்ட அறிவிப்பு தான் ஹைலைட்!
தேனி: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வங்கிகளில் பெறப்பட்டுள்ள விவசாய கடன்களும் ரத்து செய்யப்படும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்த சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு முன்பாக கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து தேசிய வங்கிகளில் வாங்கி விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள்கோரி வருகின்றனர். இது தொடர்பாக தேனியில் பிரச்சாரத்தின் போது பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த உடன் தேசிய வங்கிகளில் பெறப்பட்டுள்ள விவசாய கடன்களும் ரத்து செய்யப்படும் என்றார்.
கடும் விமர்சனம்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தேனி மாவட்டத்தில் உள்ள போடி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். ஓ பன்னீர்செல்வத்தின் போடி தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது ஓ பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார்.
யார் பெரிய அடிமை
போடி தொகுதி எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் டீக்கடை நடத்தியவர். இன்றைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். வீட்டுக்குள் ஓபிஎஸ்சுக்கும், அவரது மகன் ரவீந்திரநாத்துக்கும் பாஜவுக்கு யார் பெரிய அடிமையாக இருப்பது என்பதில் போட்டா போட்டி உள்ளது.கொரோனா ஊரடங்கின்போது ஆறு மாத காலம் மக்கள் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். ஆனால் தேனி எம்பி ரவீந்திரநாத் மொரீசியஸ் தீவுக்கும், மாலத்தீவுக்கும் சென்றார்.
விவசாய கடன் ரத்து
திமுக ஆட்சியின்போது விவசாயக்கடன் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மட்டுமல்ல; தேசிய வங்கிகளில் பெறப்பட்டுள்ள விவசாய கடன்களும், மாணவர்கள் பெற்றுள்ள கல்விக்கடன்களும் ரத்து செய்யப்படும்.
முதல் குற்றவாளி
சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் துரோகம் செய்து விட்டார்கள். ஒரு அமைச்சர், 'ஜெயலலிதா உயிரோடு இருந்தால்கூட இவ்வளவு அழகாக ஜெயலலிதாவுக்கு சமாதி கட்டியிருக்க மாட்டார்' என்கிறார். சட்ட அமைச்சர் சண்முகம், மக்கள் பணத்தை கொள்ளையடித்து சிறைக்கு சென்றவர் சசிகலா என்று செய்தியாளர்களிடம் கூறுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா என்பதை மறந்து பேசுகிறார்" இவ்வாறு கூறினார்.