ஓபிஎஸ்- நாளைய முதல்வரே என 100 அடி பேனரை தாங்கி பிடித்து வரவேற்ற ஆதரவாளர்கள்!
தேனி: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நாளைய முதல்வரே என புகழ்ந்து 100 அடி நீள பேனரை தேனி அருகே அரண்மனை புதூரில் தாங்கி பிடித்து அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், பொதுச்செயலாளர் பதவி ஆகியவை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி -ஈபிஎஸ், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் - ஓபிஎஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அக்டோபர் 7-ந் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் ராஜ்யசபா எம்பி கே.பி. முனுசாமி அறிவித்திருக்கிறார்.
ஆனால் கடந்த 3 நாட்களாக தேனி அருகே பெரியகுளத்தில் உள்ள பண்ணைவீட்டில் ஓபிஎஸ் முகாமிட்டு ஆதரவு எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போதைய சூழ்நிலையில் ஓபிஎஸ் சென்னைக்கு திரும்புவதாக இல்லை என கூறப்படுகிறது.
ஓயாத பஞ்சாயத்து...பெரியகுளம் பண்ணை வீட்டில் முகாமிட்ட ஓபிஎஸ் - ஆதரவாளர்களுடன் ஆலோசனை
பண்ணை வீடு ஆலோசனை
பெரியகுளம் பண்ணை வீட்டில் இன்றும் தமது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓபிஎஸ் விவாதித்து வருகிறார். ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை கட்சியில் படிப்படியாக தன்னை வலிமைப்படுத்த நினைக்கிறார். முதல் கட்டமாக வழிகாட்டும் குழுவை அமைக்க வேண்டும் என்பது அவரது நிபந்தனை. வழிகாட்டும் குழு ஒன்று அமையும்போது இரு அணிகளை சேர்ந்தவர்களும் சம அளவில் இடம்பெறுவார்கள்.
முதலில் வழிகாட்டும் குழு
இந்த வழிகாட்டும் குழுவின் மூலமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவது ஓபிஎஸ்-ன் திட்டம். அப்படி பொதுச்செயலாளர் பதவியை பிடித்துவிட்டால் அடுத்த முதல்வர் யார் என்பதை தாமே தீர்மானிக்க முடியும் என்பது ஓபிஎஸ் நம்பிக்கை. ஆகையால் ஒன்று என்னை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள்; இல்லையெனில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தையே மூட்டை கட்டுங்கள் என ஓபிஎஸ் பிடிவாதம் காட்டுகிறார்.
ஈபிஎஸ் தரப்பு எதிர்ப்பு
ஆனால் ஓபிஎஸ்-ன் இந்த காய்நகர்த்தல்களை ஈபிஎஸ் தரப்பு சகித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆட்சி, கட்சி இரண்டுமே ஈபிஎஸ் தரப்பில் இருந்தால்தான் சரிப்படும்; இப்போதைய ஆட்சி பிரச்சனையில்லாமல் போகிறது; மக்களிடத்திலும் அதிருப்தி இல்லை என்கிற போது எதற்காக முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்ஸை அறிவிக்க தயக்கம்? என்பது கேள்வி. இதற்கு ஓபிஎஸ் தரப்பில் எந்த பதிலும் இல்லாமல் சாக்கு போக்கு சொல்லப்படுகிறது.
100 அடி நீள பேனர்
இந்த நிலையில் பிரச்சனையை பூதகரமாக்கும் வகையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், நாளைய முதல்வரே என 100 அடி நீளத்துக்கு பேனரை பிடித்து வரவேற்பு கொடுத்துள்ளனர். தேனி அருகே அரண்மனைகாரன்புதூரில் இந்த வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது குழப்பத்தை வேண்டும் என்றே அதிகரிக்கும் சதியா எனவும் பார்க்கப்படுகிறது.
சென்னை திரும்ப மறுக்கும் ஓபிஎஸ்
இதனிடையே அக்டோபர் 7-ந் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக அறிவிக்குமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. பெரியகுளத்திலேயே ஓபிஎஸ் டேரா போட்டு சென்னை திரும்ப மறுத்து வருகிறார். இதனால் அதிமுகவில் சுமூக நிலையை உருவாக்க அவர் விரும்பவே இல்லையா? என்கிற கேள்வியும் எழுகிறது.