புயலா? புஸ்வானமா? தேனியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் ஓபிஎஸ்- நாளை மறுநாள் க்ளைமாக்ஸ்!
தேனி: தமது ஆதரவாளர்களுடன் 3 நாட்களாக தேனியில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னைக்குப் புறப்பட்டுள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற க்ளைமாக்ஸ் அறிவிப்பு நாளை மறுநாள் அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்பு நிலவுகிறது. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு படுதீவிரமாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அவசரம் காட்டுகிறதா அதிமுக.. திடீரென இந்த குழப்பம் ஏன்?
தேனி முகாம்
தேனியில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் துணை முதல்வர் ஓபிஎஸ். சென்னையில் முதல்வர் ஈபிஎஸ் அணியும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறது.
ஓபிஎஸ் பூடகமான பதிவு
இந்த நிலையில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! என பூடகமாக ஓபிஎஸ் போட்ட ட்விட்டர் பதிவு பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.
சென்னைக்கு புறப்பட்டார் ஓபிஎஸ்
அதிமுகவின் உச்சகட்ட குழப்பம் தீவிரமடைந்த நிலையில் தேனியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டுள்ளார் துணை முதல்வர் ஓபிஎஸ். இதனிடையே இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி சந்தித்து பேச இருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
அறிவிப்பு வரும்.. வராது?
சென்னை வரும் துணை முதல்வர் ஓபிஎஸ் தமது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு ஆலோசனை நடத்த உள்ளார். இதன் முடிவில் அக்டோபர் 7-ல் முதல்வர் வேட்பாளர் என்ற முடிவு அறிவிக்கப்படுமா? அல்லது பொதுக்குழுவை கூட்டி தீர்மானிப்போம் என்கிற புதிய பஞ்சாயத்துக்குள் இறங்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.