தேனியில் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியம் 8-வது வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம்.ஆண்டிபட்டி தாலூகா கடமலைக்குண்டு அருகே முத்தலாம்பாறையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் வயது 38. இவருக்கு மனைவி மற்றும் நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தமிழ்செல்வன் கடந்த ஜனவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு 8 வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார்.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. திமுக, அதிமுக தலா 7 இடங்களில் வென்றிருந்தன அப்போது, திமுகவில் இருந்து விலகி அதிமுகவுக்கு அணி மாறினார் கவுன்சிலர் தமிழ்செல்வன். இதனால் அதிமுக வசம் ஒன்றியம் போனது.
இந்நிலையில் தமிழ்செல்வன் அண்மைக்காலமாக கடன் பிரச்சினையினால் பெரும் கஷ்டப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது .மேலும் இந்த கடன் பிரச்சினைகளால் குடும்பத்தில் தினசரி சண்டைகள் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் மனமுடைந்த தமிழ்செல்வன் கடந்த டிசம்பர் 31ம் தேதி திடீரென பூச்சி மருந்து எடுத்துக் குடித்துள்ளார்
பூச்சி மருந்தை சாப்பிட்ட உடன் தமிழ்செல்வனை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து உடனடியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார் மருத்துவமனையில் கவுன்சிலரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். ஆனால் நேற்று சிகிச்சை பலன் இன்றி தமிழ்செல்வன் உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.