பெரியகுளம்.. ஆண்டிபட்டியில் தோற்ற அதிமுக.. தேனியில் மட்டும் ஒபிஎஸ் மகன் வென்றது எப்படி?
Recommended Video
தேனி: அதிமுக பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் என்றால் அது ஒ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டுமே . அவரது சொந்த ஊரான தேனியில் வெற்றி பெற்றுள்ளார். அதேநேரம் அதிமுக தனது கோட்டையான பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டியில் தோல்வி அடைந்துள்ளது. மகன் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்திய ஓ பன்னீர்செல்வம் இங்கு போதிய கவனம் செலுத்தவில்லையா என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
தேனி மாவட்டம் எப்போதுமே அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இங்கு உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுகதான் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வென்றது.
ஆனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றதால், ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளத்தில் அதிமுக பல ஆண்டுகளுக்கு பின் தோல்வி கண்டுள்ளது. அதேநேரம் திமுக 1996ம் ஆண்டுக்கு பின்னர் திமுக, பெரியகுளம் ஆண்டிபட்டியை கைப்பற்றி அசத்தி உள்ளது. ஆனால் தேனியில் மட்டும் அதிமுக வென்றுள்ளது.
இதனால் ஒ பன்னீர்செல்வம் தனது மகன் வெற்றிக்கு அதிக கவனம் செலுத்திவிட்டு மற்ற இரண்டு இடங்களில் கோட்டைவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
பெரியகுளத்தில் குளறுபடி
உண்மையில் பெரியகுளத்தில் அதிமுக தோற்றதுக்கு வேட்பாளர்கள் தேர்வில் நடந்த குளறுபடி முக்கிய காரணம். பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளராக சென்னையில் அரசு பணியில் முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் போட்டியிட தயங்கியதால், அவருக்கு பதில் கடை மட்ட தொண்டரான மயில்வேலை ஒபிஎஸ் களம் இறக்கினார். இந்த இரு நிகழ்வுகளிலும் அதிமுகவினர் மத்தியில் அதிருப்தி நிலவியது. இது முக்கிய காரணம். இத்தோடு அதிமுகவின் வாக்குகளை கதிர்காமு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பிரித்து சென்றதாலும் அதிமுக தோற்றுப்போனது.
அமுகவால் ஆண்டிபட்டியில் தோல்வி
ஆண்டிபட்டி தொகுதியை எடுத்துக்கொண்டால் அங்குதான் புரட்சி தலைவர் எம்ஜிஆர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இங்குதான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு நிச்சயம் அதிமுக ஜெயிக்கும் என்கிற நிலையே இருந்தது. ஆனால் அதிமுகவில் இருந்து பிரிந்த அமமுக கணிசமான ஓட்டுக்களை வாங்கியதால் ஆண்டிபட்டியில் அதிமுக தோற்றுப்போனது.
ரவீந்திரநாத் சிறப்பு கவனம்
அதேநேரம் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத், இதுவரை இல்லாத அளவுக்கு களப்பணி ஆற்றியதாக சொல்கிறார்கள். அவரது களப்பணி என்னவென்றால், தனது சமுதாய வாக்குகளை மட்டுமல்லாமல், இதர சாதியினர் மற்றும் முஸ்லீம் வாக்குகளை கவர சிறப்பு கவனம் செலுத்தி உள்ளார். இதனால் அமமுகவினருக்கு விழ வேண்டிய ஓட்டும் காங்கிரஸ் கட்சிக்கு விழ வேண்டிய பல ஓட்டுக்களும் ரவீந்திரநாத்துக்கு விழுந்தது.
ரவீந்திரநாத் களப்பணி
இன்னொரு காரணம் என்னவென்றால் ஓ பன்னீர்செல்வம் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால், பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏதேனும் தேனி தொகுதிக்கு பெரிதாக செய்ய வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையிலும் பாதி பேர் ஒட்டுபோட்டுள்ளனர். இதேபோல் தேனியில் தான் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட போகிறோம் என்பதை முன்பே உணர்ந்த ரவீந்திரநாத் பல மாதங்களாக இங்கு நிறைய வேலை செய்துள்ளார். அதையும் காரணமாக சொல்கிறார்கள் அதிமுகவினர்.