''தீயசக்தி திமுக''- திமுக அட்டாக்கை கையில் எடுத்த டிடிவி தினகரன்
Recommended Video
தேனி: திமுக ஒரு தீயசக்தி என்றும், அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே தமது தலையாய பணி எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பழனிச்செட்டியபட்டியில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
அமமுக நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்றும், தொண்டர்கள் ஊடகங்கள் எழுதுவதை நம்ப வேண்டாம் எனவும் தினகரன் கேட்டுக்கொண்டார்.
மோடி யோக்கியமானவராக இருந்தால்.. பேனர் வைத்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது.. டிராபிக் ராமசாமி ஆவேசம்
ஆலோசனை
மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு துவண்டு கிடக்கும் தொண்டர்களை தட்டியெழுப்பும் வகையில் மாவட்டம் தோறும் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அந்த வகையில் தேனி மாவட்டம் பழனிச்செட்டியபட்டியில் ஒரு மண்டபத்தை வாடகைக்கு பிடித்து அதில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்தினார்.
அதிகக்கூட்டம்
மண்டபம் நிரம்பி வழிந்ததால் உற்சாகமாக மைக் பிடித்த தினகரன் மாவட்டச் செயலாளர் முத்துச்சாமியை புகழ்ந்து தள்ளினார். மேலும், தங்க.தமிழ்ச்செல்வனையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் ஒரு பிடிபிடித்தார். ஆட்சி முடிந்துவிட்டால் இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவர் எனப் பேசினார்.
திமுக அட்டாக்
பதவியில் இருப்பதால் அமைச்சர்கள் நடத்தும் காமெடிகளை ஊடகங்கள் வேறு வழியின்றி காண்பிப்பதாகவும், இதெல்லாம் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், திமுக தீயசக்தி என்றும், அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே தமது தலையாய பணி எனவும்தெரிவித்தார். அமமுகவிலிருந்து வெளியேறும் நிர்வாகிகளை திமுக சேர்த்துக்கொள்வதால் அந்தக்கட்சி மீது தினகரன் பேச்சில் சற்று கோபம் அதிகம் இருந்தது தென்பட்டது.
கலகலக்கவில்லை
ஓ.பன்னீர்செல்வத்தை போல், தங்க.தமிழ்ச்செல்வனை போல் ஆயிரம் பேரை அரசியலில் தாம் பார்த்துவிட்டதாகவும், துரோகிகள் தமக்கு தேவையில்லை என்றும் தெரிவித்தார். அமமுக கலகலத்து விட்டதாக ஊடகங்கள் எழுதும் செய்திகளை யாரும் நம்பத் தேவையில்லை என்றும், நம்மை பற்றி ஊடகங்கள் இனி கவலைப்பட வேண்டாம் எனவும் கூறினார்.
போட்டோ ஷூட்
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சை முடித்த அவர், இந்த முறை நேரமின்மையால் புறப்படுவதாகவும் அடுத்த மாதம் ஒரு நாள் வந்து உங்கள் அனைவருடனும் தனிதனியாக போட்டோ எடுத்துக்கொள்கிறேன் என மேடைக்கு கீழே அமர்ந்திருந்தவர்களை பார்த்து கூறினார். மேலும், அனைவரும் இருந்து மதிய உணவு சாப்பிட்டு செல்ல வேண்டும் என தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார் தினகரன்.
பிரியாணி வாசம் கமகமக்க..அதை ஒரு பிடிபிடிக்க சிட்டாய் பறந்தனர் அமமுக தொண்டர்கள்.