தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
தேனி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடப்போவதாக கூறியிருந்தார். இதன்படி போட்டியிடுவதற்காக அவர் தேனியில் வீடு பார்த்து வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அரசியல் களத்தில் பல அதிரடியான முன்னேற்றங்கள் தினமும் ஏற்பட்டு வருகிறது. தொகுதி உடன்பாடு கூட்டணி பேச்சுவார்த்தை என திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் பரபரப்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதேபோல் அதிமுக, அமமுகவை தனது கூட்டணியில் சேர்க்குமா அல்லது சேர்க்காதா என்று ஒருபுறம் விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதாக பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம்.. புதிய கலெக்டர் நியமனம்
அமமுக வாக்குவங்கி
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுவரைஅதை பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கியை அமமுக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அமமுக தனித்து களம் கண்டால் தங்கள் கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் என்று பாஜக நினைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பாஜக தொடர்ந்து பேச்சு
ஆனால் அதேநேரம் அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்க இதுவரை எடப்பாடியார் விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தையை பாஜக நடத்தி வருவதாகவும் தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாக உலா வருகின்றன.
அதிரடி முடிவு
இந்நிலையில் இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க மறுபக்கம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனித்து களம் இறங்கவும் தயாராகி வருகிறார். விருப்ப மனு விநியோகம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் டிடிவி தினகரன் தேனி மாவட்டத்தில் ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட போவதாக, ஏற்கனவே அறிவித்திருந்தார்.
தேனியில் வீடு
அதன்படி தேனியில் டிடிவி தினகரன் தங்க அமமுகவினர் வீடு பார்த்து வருகின்றனர். தேனி மாவட்டத்தை பொறுத்தவரை. தேனி நகரத்தை உள்ளடக்கிய பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தனித்தொகுதி என்பதால் தினகரன் போட்டியிட முடியாது. கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு இல்லை.
ஆண்டிபட்டியில் உறுதி
ஆனால் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆண்டிபட்டியில் போட்டியிடவே மிக அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஆண்டிபட்டியில் முக்குலத்தோர் ஓட்டு அதிகம் என்பதால், அங்கு போட்டியிடலாம். அதேநேரம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு குடைச்சல் கொடுக்க, போடியில் நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இரண்டு தொகுதியில் எதில் டிடிவி தினகரன் நின்றாலும் எதிர்தரப்புகளுக்கு கடும் சவால் இருக்கும். இதனால் ஓபிஎஸ் மற்றும் தங்க தமிழ்செல்வன் தரப்பினர் கலக்கத்தில் உள்ளனர்.