மறுவாக்குப்பதிவு அமமுகவிற்கு சாதகம்.. உற்சாகத்தில் தங்க தமிழ்செல்வன்
Recommended Video
தேனி: மறுவாக்குப்பதிவு அமமுகவிற்கு சாதகமாக இருக்கும் என தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட ஆண்டிபட்டி தொகுதி பாலசமுத்திரம் வாக்குச்சாவடி மற்றும் பெரியகுளம் தொகுதிக்கு உள்பட்ட வடுகப்பட்டி வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இந்த மறு வாக்குப்பதிவினை முதலில் அமமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் மறுவாக்குப்பதிவு இன்று தீவிரமாக நடந்து வரும் நிலையில் சந்தோஷத்தில் இருக்கிறார் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன்.
இன்று தேனி ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் மறுவாக்குப்பதிவு நடந்து வரும் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களித்து வருவதை தங்கதமிழ்செல்வன் பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், மறுவாக்குப்பதிவு என்பது தேவையற்ற ஒன்று. இருப்பினும் மறுவாக்குப்பதிவு அமமுகவிற்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மறுவாக்குப்பதிவு நடந்தால் பொதுவாக ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவார்கள். இந்நிலையில் தங்கதமிழ்செல்வன் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறார். அவர் ஏற்கனவே போட்டியிட்ட ஆண்டிபட்டி தொகுதி என்பது ஒரு காரணம்.இன்னொரு காரணம் கடந்தமுறை வாக்களிக்காதவர்கள் இந்த முறை தனக்கு வாக்களிப்பதாக நம்புகிறார் தங்க தமிழ்செல்வன். இதனால் உற்சாகத்தில் இருக்கிறார்.