அதிமுகவிற்கு விசுவாசமாக இருங்கள்...2021ல் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த களப்பணியாற்றுங்கள் - ஓபிஎஸ்
கட்சிக்கு மட்டுமே தொண்டர்கள் நிர்வாகிகள் விசுவாசமாக இருக்கவேண்டும். எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியதில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தேனி: அதிமுகவினர் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும். எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை என்று தொண்டர்கள் மத்தியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக அமையட்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். ஆட்சியில் துணை முதல்வராக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு 2017ஆம் ஆண்டில் இருந்து இந்த இருவரின் தலைமையின் கீழ் கட்சியும், ஆட்சியும் இருந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
ஆயுஷ் செயலாளரை நீக்குங்கள்.. தமிழக அதிகாரிக்கு அங்கு போஸ்டிங் போடுங்கள்.. சசி தரூர் அதிரடி!
அதிமுகவில் முதல்வர் சர்ச்சை
இந்த சூழ்நிலையில்தான் அதிமுகவில் அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. செல்லூர் ராஜூ கொளுத்திப் போட்ட நெருப்பை, ராஜேந்திர பாலாஜி ஊதிவிட பரபரப்பு பற்றிக்கொண்டது. கூடவே அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜெயக்குமார் என தொடர முதல்வர் வேட்பாளர் சர்ச்சை கொளுந்து விட்டு எரிந்தது.
அமைச்சர்கள் பஞ்சாயத்து
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அன்று நாள்முழுவதுமே முதல்வர், துணை முதல்வர் வீட்டில் மாறி மாறி சந்திப்புகளும் கூட்டங்களும் நடைபெற்றன. இதனையடுத்து கூட்டணி பற்றியும் முதல்வர் வேட்பாளர் யார் என்று பின்னர் அறிவிப்போம் கட்சிக்கு எதிராக யாரும் தலைமையை மீறி கருத்து சொன்னால் கடும் நடவடிக்கை பாயும் என்று எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூட்டறிக்கை வெளியிட அந்த சர்ச்சை அடங்கிப் போனது.
ஓ. பன்னீர் செல்வம் பேச்சு
2021 சட்டசபை தேர்தல் பணிகளை ரிஷி பஞ்சமி தினமாக இன்றைய தினம் தொடங்கி விட்டார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ரிஷி பஞ்சமி தினத்தில் பணிகளை தொடங்கி விடுவார். அதே பாணியில் எடப்பாடி பழனிச்சாமியும், ஒ.பன்னீர் செல்வமும் அவரவர் சொந்த ஊர்களில் தொண்டர்களிடம் சட்டசபை தேர்தல் பணிகள் பற்றி பேசி வருகின்றனர்.
2021ல் அதிமுகவை வெற்றி பெற செய்யுங்கள்
இன்றைய தினம் பெரியகுளத்தில் தொண்டர்கள் மத்திய பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவில் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை மட்டுமே பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்றார். பொறுப்பாளர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு அதிமுகவிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்றும் கூறிய அவர், எனக்கு மட்டுமே தொண்டர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியதில்லை என்றும் தெரிவித்தார்.
வெற்றியே நமது இலக்கு
அதிமுக என்ற இயக்கம் பல நூற்றாண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு களப்பணியாற்ற வேண்டும். வெற்றியே நமது இலக்கு என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
படிப்பினையில் இருந்து பாடம் படிங்க
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிமேல் நடப்பவை நல்லவையாக அமையட்டும். இதுவரை கிடைத்த படிப்பினைகள் நமக்கு பாடமாக இருக்க வேண்டும். 2021 சட்டசபை தேர்தல்தான் நம்முடைய இலக்கு. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த அனைவரும் களப்பணியாற்ற வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.