அட தேவுடா.. இந்த அநியாயத்தை கேட்டீங்களா.. இதுக்காகவா மனைவியை வீட்டை விட்டு துரத்துவது??
தேனி: அட தேவுடா.. இந்த அநியாயத்தை கேட்டீங்களா? குழந்தை கருப்பாக பிறந்துவிட்டதாம்.. அதுக்காக மனைவியை வீட்டை விட்டு துரத்தி உள்ளார் கணவர்.
கூடலூரை சேர்ந்த தம்பதி பிரபாகரன் - மனோஜா. பிரபாகரன் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை கருப்பாக இருந்ததாம். அதற்காக வீட்டில் உள்ளவர்கள் குழந்தையையும், மனோஜாவையும் திட்டி தீர்த்து வந்திருக்கிறார்கள். குழந்தையை யாருமே எடுத்து கொஞ்சுவதும் கிடையாதாம்.
பிறகு திடீரென வரதட்சணை பிரச்சனையை ஆரம்பித்தார்கள். ஏற்கனவே கல்யாணத்தின்போது மனோஜாவுக்கு 30 சவரன் நகை, சீர் வரிசைகள் எல்லாம் வரதட்சணையாக தந்தார்கள். இப்போது திரும்பவும் 3 லட்சம் ரூபாய் வாங்கி வர சொன்னார்கள்.
இதற்கு மனோஜா மறுப்பு சொல்லவும், "3 லட்சம் பணம் கொண்டு வராட்டி, பிரபாகரனுக்கு 100 பவுன் நகை போட்டு வேற பெண்ணை கல்யாணம் செய்து வைப்போம்" என்று மாமியார் வீட்டில் சொல்லி இருக்கிறார்கள். அதோடு வீட்டை விட்டும் துரத்தி இருக்கிறார்கள்.
வேறு வழி தெரியாமல் மனோஜா இது மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துவிட்டார். இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் பிரபாகரன் உள்ளிட்ட குடும்பத்தார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். உண்மையிலேயே பிரச்சனை குழந்தை கருப்பாக பிறந்ததா? அல்லது அந்த சந்தேகம் வரதட்சணை வரை வளர்ந்துவிட்டதா? என தெரியவில்லை.