தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்... மு.க.ஸ்டாலின் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவு
தேனி: தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமமுக தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு, பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார், அங்கு சென்றனர்.
அப்போது, அலுவலகத்திற்குள் நுழைய அமமுக தொண்டர்கள் நுழைய அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. கைகலப்பு வரை சென்றதால் போலீசார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
என் மானத்தை வாங்குகிறார் பாலாஜி.. அதான் டெல்லிக்குப் போய்ட்டேன்.. மனைவி நித்யா அதிரடி
1.48 கோடி ரூபாய் பறிமுதல்
இதனையடுத்து, அலுவலகத்தில் இருந்து 1.48 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தின் அருகே இருந்தவர்கள் 5 லட்சம் வரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. பணத்துடன் ஒரு தபால் ஓட்டும், வாக்காளர்கள் பட்டியலும் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பபட்டது. அப்போது, தேனி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர், தங்க தமிழ்ச் செல்வன், ஆண்டிபட்டியில் பறிமுதல் செய்யப்பட்ட ஒன்றரை கோடி பணம் அ.ம.மு.க.வுக்கு சொந்தமானது இல்லை என்று பதிலளித்தார்.
வழக்குப்பதிவு
இந்தநிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி செய்தியாளர்களை சந்தித்ததாக தேனி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் மீது ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலின் மீது வழக்கு பதிவு
இதற்கிடையே, வேலூரை போன்று, ஆண்டிப்பட்டியிலும் தோ்தலை நிறுத்தும் நோக்கில் தான் வருமான வரித்துறையினா் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது என்று திமுக தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியிருப்பதாக அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்விதி மீறல்
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 16-ந்தேதி மாலை 6 மணி முதல் தேர்தல் பரப்புரை, அரசியல் கட்சியினரின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஸ்டாலின் மற்றும் தங்கதமிழ்ச் செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.