#HBDPennycuick .. மேற்கே பாயும் நதியை கிழக்கே திருப்புவது சாத்தியமா? என்ன செய்தார் பென்னிகுக்?
தேனி: மேற்கு நோக்கி பாயும் நதியை கிழக்கே திரும்பியவர்.. ஐந்து மாவட்ட மக்கள் மனதார இன்று பொங்கல் வைக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் கர்னல் ஜான் பென்னிகுவிக் என்ற வெள்ளைக்காரர். சொத்தையெல்லாம் விற்று மேற்கு நோக்கி பாயும் முல்லை பெரியாறு நதியை கிழக்கே திரும்ப வைத்து கள்ளிக்காடுகளை நெல் விளையும் கழனியாக மாற்றியவர்.. பொங்கல் அன்று பிறந்த கர்னல் ஜான் பென்னிகுக் , தேனி மாவட்ட மக்களின் குலசாமியாக வாழ்கிறார்.
இந்த உலகில் மக்களுக்காக தன்னுடைய மொத்த சொத்தையும் விற்று அணையை கட்டியவர் என்றால் அது கர்னல் ஜான் பென்னிகுக் தான். அப்படி அவருக்கு என்ன ஒரு அன்பை எங்கள் மக்கள் காட்டினார்கள் என்பது அவருக்கே வெளிச்சம்.
எங்கள் முன்னோர்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் உருவான முல்லை பெரியாறு அணையை மற்ற அணையை போல் சாதாரணமாக கடந்துவிட முடியாது. ஏனெனில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பேய் போல் ஆண்டுதோறும் முழுவீச்சில் வற்றாத நதியாக பாய்ந்தோடும் முல்லைபெரியாற்றில் கட்டுவது என்பது எளிதான விஷயம் அல்ல. அதுவும் மீண்டும் கிழக்கு நோக்கியே திருப்புவது என்பதும் சாத்தியம் ஆனது அல்ல.
ஆந்திராவில் பவன் கல்யாணை வைத்து புதிய வியூகம் வகுக்கிறது பாஜக?
சாத்தியம் இல்லை
இன்றைக்கு நம்மிடம் பல ஆயிரம் தொழில்நுட்பங்கள் இருக்கலாம். ஆனால் முல்லைபெரியாறு அணையை கட்டிய தொழில்நுட்பத்தை முழுயைமாக அறிந்து அதை இப்போது செய்திட முடியவே முடியாது. ஏனெனில் அந்த அளவுக்கு மிக அற்புதமான தொழில்நுட்பத்தை கட்டியிருக்கிறார்கள் முல்லை பெரியாறு அணையை..
முதல்முதலாக 1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டுவரத் திட்டமிட்டார். இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
ஜேம்ஸ் கார்டுவெல்
1807ல் மதுரை ஆட்சியாளர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார். ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார்.
சுமித் தயார் செய்தார்
1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.
என்ஜினியர் பென்னிகுக்
இறுதியாக 1882 இல் இந்தத் திட்டம் ஆங்கிலேய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேஜர் ஜான் பென்னிகுக்கிடம் அதன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதற்காக அவர் 1884 இல் தயாரித்து சமர்ப்பித்த செலவுத் திட்டமும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்றது.
சுருளி ஆற்றில் கலந்து
இதையடுத்து பென்னிகுக்கின் திட்டப்படி இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.
அணை பணி
1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான் பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார். இதன்படி சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப்பகுதியிலிருந்து தேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது. அணை சுண்ணக்கல், சுர்க்கி கலவையால் கட்டப்பட்டது.
பாதையில் உடைந்தது
அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.
சொத்தை விற்று கட்டினார்
அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். முல்லைப் பெரியாறு அணை சுண்ணக்கல் மற்றும் சுர்க்கி கலவையுடன் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட ஒரு எடையீர்ப்பு அணையாகும்.
வென்லாக் பிரபு திறந்தார்
இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும், அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார். இவ்வணையால் தான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.
பாசன வசதி
இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள 2,08, 144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
முப்போகம் விளையும் பூமி
முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் பாலைவனம் ஆகியிருக்கும். குடிப்பதற்கும் தண்ணீரே கிடைத்திருக்காது. காரணம் வைகை நதி வற்றாத ஜீவநதி அல்ல. முல்லை பெரியாறு தான் வற்றாத ஜீவ நதி. இந்த நதி வற்றியதாக வரலாறு இல்லை. இந்த நதியில் எப்போதும் தண்ணீர் கொஞ்சமாவது இருந்து கொண்டே இருக்கும். தேனி மாவட்டம் முப்போகம் விளையும் பூமியாக திகழ இந்த நதியே காரணம். இதனால் தேனி மாவட்ட மக்களின் குலசாமியாக பென்னிகுக் திகழ்கிறார்.அவரது பிறந்த நாளாக ஜனவரி 15ம் தேதி அன்று பொங்கல் வைத்து வழிபாடுகிறார்கள்.