நிபா வைரஸை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம்.. கேரள எல்லையில் குவிந்த மருத்துவ குழு
தேனி: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் மீண்டும் பாதிப்பு ஏற்படுத்துவதை தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று தமிழக எல்லை கம்பம்மெட்டு, லோயர்கேம்ப், போடிமெட்டு சோதனைச்சாவடிகளில், கேரளாவிலிருந்து வாகனங்களில் வருபவர்களிடம் தேனி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவக்குழு சோதனை செய்து, வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து அடித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 க்கு மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி புனே தேசிய ஆய்வு கூடத்தில் ஆய்வுசெய்தபோது இந்த காய்ச்சலுக்கு ~நிபா| என்ற கொடிய வைரஸ் காரணம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவ துறையினர் தீவர நடவடிக்கை எடுத்து, இந்த வைரஸ் கட்டுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் கேரளப்பகுதிகளில் நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படுவதை தொடர்ந்து அதற்கான சேதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நல்ல வேளையாக தமிழகத்தில் நிபா வைரஸ் பற்றிய அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.
இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக எல்லைபகுதிகளில், மருத்துவக்குழுவினர் கேரளாவில் இருந்து வருபவர்களையும், வாகனங்களையும் சோதனை செய்து வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து அடிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தேனி மாவட்ட எல்லைப்பகுதிகளான கம்பம் மெட்டு பழைய சோதனைச்சாவடி, லோயர்கேம்ப் பஸ்டாண்டு பகுதிகளில் தேனி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு இரண்டாம் நாளாக வாகனசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம் மெட்டு பழைய சோதனைச்சாவடி பகுதியில் புதுப்பட்டி சுகாதார ஆய்வாளர் தலைமையிலும், லோயர்கேம்ப் பஸ்டாண்டு பகுதியில் கூடலூர் சுகாதார களமேற்பார்வையாளர் தலைமையிலும் மருத்துவக்குழுவினர் மேலும் போடிமெட்டு பகுதியிலும் கேரளாவிலிருந்து வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல் உண்டா என சோதனை செய்கின்றனர். மேலும், வாகனங்களுக்கு தொற்றுநோய் கிருமிநாசினி மருந்து அடித்து வருகின்றனர்.
நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவியபிறகுதான் சாப்பிட வேண்டும். மேலும், காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல் போன்றவை ஏற்ப்பட்டால் உடனடியாக அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலே அல்லது அரசு மருத்துவமகை;கு சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.