வெட்டவெளி செக்போஸ்டில் கல்யாணம்.. தாலி கட்டிய மாப்பிள்ளை.. பிரித்துச் செல்லப்பட்ட பெண்!
இரு மாநில எல்லையில் நடந்த திருமணம் இணையத்தில் வைரலாகி வருகிறது
தேனி: எவ்வளவோ முயற்சித்தும் இ-பாஸ் கிடைக்கவில்லை.. நிச்சயிக்கப்பட்ட கல்யாணமும் தள்ளி கொண்டே போய்விடுமோ என்ற அச்சத்தில், புதுமண தம்பதி இருமாநில எல்லையில் ஒன்றுகூடி கல்யாணம் செய்து கொண்டனர்.
கொரோனாவைரஸ் தாக்கம் அதிகமாகி வருகிறது.. அதனால் கட்டுப்பாடுகள் ஒரு பக்கமும், தளர்வுகள் மறுபக்கமும் அமலாகி வருகிறது.
அந்த வகையில், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மிக குறைவான ஆட்களை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு இ-பாஸ் முறையை மத்திய மாநில அரசுகள் அறிமுகம் செய்தது.
இந்த நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட ஒரு ஜோடிக்கு இ-பாஸ் கிடைக்காமல் போய்விட்டது.. தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் பிரசாந்த்.. 25 வயதாகிறது.. இவருக்கும் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் பெரியோர்கள் நிச்சயம் செய்திருந்தனர்.. கேரளாவில் குமுளி அருகே வண்டிப்பெரியாறு வாளார்டி மாரியம்மன் கோயிலில் இவர்களது திருமணம் நடக்க இருந்தது.
ஆனால், மாப்பிள்ளை வீட்டார் கேரளா செல்வதற்கு இ-பாஸ் கிடைக்கவில்லை.. எப்படி எப்படியோ முயற்சித்தும் பாஸ் கிடைக்காததால், நிச்சயிக்கப்பட்ட நாளில், அந்த நேரத்தில் தாலி கட்ட முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்பட்டனர்.. கேரளாவுக்கு செல்ல மாப்பிள்ளை வீட்டாரை போலீசார் அனுமதிக்கவில்லை.. அதனால், இரு வீட்டினரும் தமிழக கேரள எல்லைக்கு வந்து சேர்ந்தனர்..
அம்மாவைப் பார்க்கணும்.. டெல்லியிலிருந்து தனியாக விமானம் ஏறி வந்த.. 5 வயசுப் பையன்
அங்கிருந்த போலீசாரிடம் அனுமதி வாங்கி கொண்டு, அவர்களின் முன்னிலையிலேயே திருமணம் நடந்தது.. மணமக்களை எல்லைப்பகுதியில் இருந்த கேரள வருவாய்த்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் மனமார வாழ்த்தினர்... கடைசியில் தாலி கட்டி முடித்த கொஞ்ச நேரத்தில் மணமகளை அவர்கள் ஊருக்கு அழைத்து சென்றுவிட்டனர்.. மணமகன் பிரசாத் ஏமாற்றத்துடன் கம்பம் திரும்பி வந்தார். தமிழக - கேரள எல்லையின் வெட்ட வெளியில் தாலி கட்டிய இந்த திருமண வீடியோ வைரலாகி வருகிறது.