கொரோனா- கேரளாவில் இருந்து மலை வழியாக தமிழகம் வந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கினர்- 2 பேர் பலி
தேனி: கொரோனாவால் போக்குவரத்து தடை அமலில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை வழியாக தமிழகம் வந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 5 வயது பெண் குழந்தை உட்பட 2 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Recommended Video
இந்தியாவில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் கேரளாவில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது
கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுவிட்டன. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.
இதனிடையே கேரளாவின் இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை அருகே உள்ள பேத்தொட்டி என்ற இடத்தில் தோட்ட வேலை செய்து வந்த தேனி மாவட்டம் போடி ராசிங்கபுரம் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 10 பேர் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான வண்ணான்துறை வழியாக ராசிங்கபுரம் வருவதற்காக நடந்து வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர காட்டுத் தீயில் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
இது தொடர்பாக தேனி மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற தேனி மாவட்ட வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆனால் மீட்புப் பணி பலனளிக்காமல் ஐந்து மாத பெண் குழந்தையும் அவரது தாயும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்து விட்டனர். எஞ்சியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.