தொடர் மழையால் குற்றால அருவிகளில் பெருவெள்ளம்... கடைகள் மூழ்கின - கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
தென்காசி: விடாது கொட்டி வரும் கனமழையால் குற்றால வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் வெள்ளம் சீறிப்பாய்ந்து வருகிறது. கடைவீதிகளை சூறையாடி வெள்ளம் குற்றாலநாதர் கோவிலுக்குள் புகுந்துள்ளது.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. அணைகள் ஏரிகள், குளங்களில் தண்ணீர் நிரம்பி வெளியேறி வருகிறது.
திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் தொடர்மழையும் அதன் காரணமாக பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ளது. எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
ரமா ஏகாதசி: அரச வாழ்வு தரும் ஏகாதசி விரதம் - துவாதசியில்என்ன சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது
விடாமல் கொட்டிய மழை
தென்காசியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் பலத்த மழை விட்டுவிட்டு பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விடாமல் மழை கொட்டியது. குற்றாலத்திலும் மழை பெய்ததால், அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் செம்மண் நிறத்தில் தண்ணீர் சென்றது. அருவியில், முன்புறம் உள்ள நடைபாலம் வரையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டியது.
கோவிலுக்குள் புகுந்த வெள்ளநீர்
கடைவீதிகள் அனைத்தும் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டது. குற்றாலநாதர் கோவிலில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு இன்று கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் நகர் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அணைகள் நிரம்பின
தொடர் மழையின் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து. அடவி நயானார் அணை, கடனாநதி, குண்டாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
தாமிரபரணியில் வெள்ளம்
நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நெல்லை மாநகரில் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளம் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது. பாபநாசம் அணை, சேர்வலாறு அணை பகுதிகளில் நேற்று பகலில் பரவலாக மழை பெய்தது. இதனால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
சூழ்ந்த வெள்ளம்
அணையில் இருந்து திறக்கப்படும் உபரி தண்ணீரும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.