பெரியகுளத்தில் தனிநபர் மோதல் கலவரமானது : நள்ளிரவில் போலீஸ் மீது தாக்குதல் - எஸ்.பி படுகாயம்
Recommended Video
தேனி: பெரியகுளம் அருகே நள்ளிரவில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கலைக்கச் சென்ற காவல் துறையினர் மீது கல்வீசி கொடூரமான முறையில் தாக்கினர் இதில் மாவட்ட எஸ்.பி. உட்பட 20க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயம் அடைந்தனர். மாவட்ட எஸ்பியின் கண்ணிற்கு கீழே கல் தாக்கியதில் அவர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேனி மாவட்டம் , பெரியகுளம் அருகே உள்ள இலட்சுமிபுரத்தைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் சருத்துப் பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்குமிடையே கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த முரளி என்பவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறிய அளவில் ஏற்பட்ட பிரச்சனையை இரண்டு பேர் சம்மந்தப்பட்ட சமூகத்தினர் ஜாதிக் கலவரமாக மாற்றினர்.
முரளி தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலட்சுமிபுரம் பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் முரளியைத் தாக்கிய சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர்களைக் கைது செய்யக் கோரி தேனி - பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் மீது தாக்குதல்
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை சருத்துப் பட்டியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதி இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கியதில் காவல்துறையினர் அவர்களை மீட்டு விசாரித்த போது இவர்கள் இருவரும் பெரியகுளம் தென்கரை இந்திராபுரியைச் சேர்ந்த அஜித்குமார், மற்றும் சுரேந்தர் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும்,பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட எஸ்பி பேச்சுவார்த்தை
இதனையறிந்த இவர்களது உறவினர்கள் பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் நேற்று அஜித்குமார், சுரேந்தர் ஆகியோரைத் தாக்கிய இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் .இத்தகவல் அறிந்த பெரியகுளம் காவல்துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியதில் குற்றவாளிகளை கைது செய்வதாகக் கூறியதையடுத்து மறியலைக் கைவிட்டனர்.
மர்ம நபர்கள் தாக்குதல்
இந்நிலையில் இதனைத் தொடர்ந்து இன்று தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் சருத்துப்பட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அவரை மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்தார் அவரை பெரியகுளம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தள்ளுமுள்ளு
இவர் இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியதையடுத்து சருத்துப்பட்டி விலக்கில் பெரியகுளம் - தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களைக் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக் கலைக்க முயன்ற போது காவல்துறையினர் மற்றும் அந்த பகுதி மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின் மோதலாக மாறியது.
கல்வீசி தாக்குதல்
நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கற்களை எடுத்து காவல்துறையினர் மீது சரமாரியாக வீசத் தொடங்கியதால் காவல்துறையினர் நிலை குலைந்தனர். கற்கள் வீசி தாக்கப்பட்டதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட காவலர்கள் 20 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், தேனி க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கண் மருத்துவமனையில் சிகிச்சை
இதில் காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கண் அருகில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை தேனி மருத்துவ மனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . இதனைத் தொடர்ந்து இலட்சுமிபுரம், சருத்துப் பட்டி ஆகிய பகுதிகளில் மோதலில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், பாதுகாக்க வந்த காவல்துறையினரையே கொடூரமாக தாக்கியதாலும் உச்ச கட்ட பதற்றம் நிலவுகின்றது.
போலீஸ் குவிப்பு
பதற்றத்தைத் தணிக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு தனி நபர் மோதலை ஜாதி மோதலாக மாற்றியது மட்டுமல்லாமல் பாதுகாக்க வந்த காவலர்களையும் கண்மூடித்தனமாக தாக்கியது அதிர வைத்துள்ளது. காவல் துறையினர் இது போன்ற ஜாதி மோதலில் ஈடுபடுபவர்களையும், காவல் துறையை தாக்குபவர்கள் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
செய்தி படங்கள்:
K.ராதாகிருஷ்ணன், தேனி